பாஜகவினர் சொல்லும் சால்ஜாப்புகள் எடுபடாது... ரயில்வே நிர்வாகம் மீது ப.சிதம்பரம் சீற்றம்
சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களை கசக்கி அவர்களிடம் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது குறித்து மே 2-ம் தேதி ரயில்வே போர்டு வெளியிட்ட உத்தரவில் 11-ம் பத்தியை (பாரா) பார்த்தால் அதில் தெளிவாக உள்ளது என்றும், குறிப்பாக 11(c) பத்தியை படிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ட்வீட்டர் மூலம் பதிவு வெளியிட்டுள்ள அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் பாஜகவினர் சொல்லும் சால்ஜப்புகள் இனி எடுபடாது என்றும், இயல்பான காலங்களில் இருந்த இயல்பான மானியங்களை இந்த விவாதத்தில் கொண்டு வருவது திசை திருப்பும் முயற்சி என சாடியுள்ளார். தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தில் மானியம் உள்ளதாக கூறி திசை திருப்பும் முயற்சி பலிக்காது எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவ்வாறு இயக்கப்படும் ரயில்களில் தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் விவகாரம் தான் தேசிய அரசியலில் விவாதப் பொருளாக உள்ளது. தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும் என சோனியாகாந்தி நேற்று முன் தினம் அறிவித்த நிலையில், ரயில்வே நிர்வாகமே மானியம் அளிப்பதாக பாஜக தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இந்நிலையில் அதனைத் தொடர்ந்து பாஜகவினருக்கு பதிலடி தரும் வகையில் ப.சிதம்பரம் இன்று புதிய பதிவு ஒன்றை தனது ட்வீட்டரில் வெளியிட்டிருக்கிறார். இதனிடையே தொழிலாளர்களுக்கான கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும் என்ற சோனியாகாந்தியின் முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு என ப.சிதம்பரம் தனது ட்வீட்டரில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications