புயல்.. தடைகளை தகர்க்கிறார்.. ப. சிதம்பரத்தையே கிரிக்கெட் கமெண்ட் அடிக்க வைத்த இளம் ஐபிஎல் வீரர்!
சென்னை: முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் எம்பி ப. சிதம்பரத்தை இளம் ஐபிஎல் கிரிக்கெட் வீரர் ஒருவர் அசரடித்துள்ளார். பொதுவாக கிரிக்கெட் குறித்தெல்லாம் கருத்து தெரிவிக்காத ப. சிதம்பரமே இந்த முறை கிரிக்கெட் பற்றி பேசும் அளவில் அந்த வீரரின் ஆட்டம் அமைந்துள்ளது.
2022 ஐபிஎல் தொடர் மிகவும் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. முதலில் பெரிய விறுவிறுப்பின்றி சென்ற ஆட்டம் இந்த முறை ஒவ்வொரு போட்டியிலும் கடைசி ஓவர் பினிஷிங் காரணமாக கவனம் பெற்றுள்ளது. அதிலும் இந்த சீசனில் பல புதிய வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பதோனி, அனுஜ் ராவத், திலக் வர்மா , நடராஜன் போன்ற வீரர்கள் மிக மிக சிறப்பாக ஆடி வருகிறார்கள். ஆனால் இதில் அதிகம் கவனம் ஈர்க்கும் வீரர் என்றால் அது கண்டிப்பாக ஹைதராபாத் அணியில் ஆடும் உம்றான் மாலிக்தான்.
இந்த சீஸனின் பெஸ்ட் என்றால் அது உம்ரான் மாலிக்தான். கடந்த சீசனில் ஹைதராபாத் அணியில் ஆடிய உம்ரான் அசால்ட்டாக 153 கிமீ வேகத்தில் பந்து வீசினார். 21 வயதே ஆன இவர் சர்வதேச அளவில் வலுவான வெளிநாட்டு வீரர்களை தனது வேகப்பந்து மூலம் திணற வைத்தார்.
இவரை அடையாளம் கண்டது இர்பான் பதான்தான். கடந்த சீசனுக்கு முன்பாகவே உம்ரான் மாலிக் பவுலிங்கை பார்த்து இர்பான் பதான்தான் பரிந்துரையை செய்தார். இவரை எடுங்கள் என்று ஹைதராபாத் அணிக்கு ஆலோசனை சொன்னார்.
இவருக்கு தனிப்பட்ட பயிற்சியையும் இர்பான் பதான் வழங்கினார். இப்போது ஹைதராபாத் அணியின் மிக முக்கியமான வீரராக உம்ரான் மாலிக் உருவெடுத்துள்ளார். ஒரே ஓவரில் அனைத்து பந்துகளையும் 150 கிமீ வேகத்திற்கும் அதிகமாக வீசுவதுதான் இவரின் திறமை.
ஆனால் அது மட்டுமின்றி நல்ல ஷார்ட் பந்து, யார்க்கர் பந்து, நல்ல லென்த்தில் பந்து போடுவது என்று இவருக்கு திறமைகள் பல உள்ளன. இதுவரை 11 போட்டிகளில் இவர் 17 விக்கெட் எடுத்துள்ளார். நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்த உம்ரான் மாலிக் வெறும் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் எடுத்தார்.
இதுதான் ஐபிஎல்லில் இவரின் பெஸ்ட் பவுலிங் பிகர். இவரை இந்திய அணியில் உடனடியாக இணைக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் பலர் உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் உடனே சேர்ப்பது இந்திய அணிக்குத்தான் நல்லது என்று பாராட்டி உள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் எம்பி ப. சிதம்பரம் உம்ரான் மாலிக்கை பாராட்டி போஸ்ட் செய்துள்ளார். அதில், உம்ரான் மாலிக் என்னும் புயல் தன்னுடைய பாதையில் இருக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து வருகிறது.
அவரின் வேகமும், ஆக்ரோஷமும் கண்ணுக்கு உள்ளேயே வைத்துக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருக்கிறது.
அதிலும் அவரின் இன்றைய (நேற்றைய மேட்ச்) ஆட்டத்திற்கு பின்.. அவர்தான் இந்த சீசனில் மிக சிறந்த கண்டுபிடிப்பு என்று சந்தேகமே இன்றி கூறலாம்.
பிசிசிஐ உடனே அவருக்கு தனிப்பட்ட வகையில் சிறந்த கோச்சிங் கொடுக்க வேண்டும். அதோடு உடனே இந்திய தேசிய அணியில் இணைக்க வேண்டும் என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
தற்போது ஹைதராபாத் அணியில் கலக்கி வரும் உம்ரான் மாலிக்கிற்கு தென்னாப்பிரிக்க வேகப்பந்து ஜாம்பவான் ஸ்டெயின் நேரடி பயிற்சி அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.