பீகாரில் சொந்த வீடு இருக்கும்போது தமிழகத்தில் எப்படி வாக்காளராக முடியும்? ப.சிதம்பரம் கேள்வி
சென்னை: "பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பம் பீகாரில் நிரந்தர வீடு வைத்திருந்து பீகாரில் வசிக்கிறது என்றால், புலம்பெயர்ந்த தொழிலாளி தமிழ்நாட்டிற்கு "நிரந்தரமாக குடியேறியவர்" என்று எப்படி கருத முடியும்? " என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஜூலை 26 ஆம் தேதி வரை சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை (SIR) தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி வீடு வீடாகச் சென்று வாக்காளர்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டது.

பீகாரில் இருந்து வெளியேறியவர்கள் தென்னிந்திய மாநிலங்களில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். எனவே அவர்கள் தாங்கள் வசிக்கும் மாநிலத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம். அதன் அடிப்படையில் பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் தங்கியுள்ளதால் இனி தமிழக வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ப.சிதம்பரம் ட்வீட்
இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், "பீகாரின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் திகைப்பூட்டுவதாக மாறி வருகிறது. பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக சேர்ப்பது பற்றிய தகவல்கள் ஆபத்தானவை மற்றும் சட்டவிரோதமானது. 'நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்' என்று அழைப்பது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவமதிப்பதாகும்.
மேலும், தமிழக வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் பெரிய அளவில் தலையிடும் செயலாகும். வழக்கமாகச் செய்வது போல, புலம்பெயர்ந்த தொழிலாளி பீகார் அல்லது அவரது சொந்த மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க ஏன் திரும்பிச் செல்லக்கூடாது? சத் பூஜை பண்டிகையின்போது புலம்பெயர்ந்த தொழிலாளி பீகாருக்கு செல்லவில்லையா?
பீகாரில் வீடு
வாக்காளராகப் பதிவு செய்ய ஒருவருக்கு நிலையான மற்றும் நிரந்தர சட்டப்பூர்வ வீடு இருக்கவேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பீகாரில் அல்லது வேறு மாநிலத்தில் அத்தகைய வீடு உள்ளது. அவர் எப்படி தமிழ்நாட்டில் வாக்காளராகப் பதிவு செய்ய முடியும்?
புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பம் பீகாரில் நிரந்தர வீடு வைத்திருந்து பீகாரில் வசிக்கிறது என்றால், புலம்பெயர்ந்த தொழிலாளி தமிழ்நாட்டிற்கு "நிரந்தரமாக குடியேறியவர்" என்று எப்படி கருத முடியும்.
இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தின் மூலம் துஷ்பிரயோகம் செய்து மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சிக்கிறது. இந்த அதிகார துஷ்பிரயோகத்தை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்துப் போராட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications