2026 சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் மனைவியை ஜெயிக்கவைப்போம்.. பா.ரஞ்சித் பரபர
சென்னை: யார் யாரோ வெற்றி பெறுகிறார்கள்.. நம்மால் ஏன் வெல்ல முடியாது? 2026 சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் மனைவியை வெற்றி பெற வைக்க வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் பெரம்பூர் செம்பியம் பகுதியில் அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம், ரௌடிகள், வழக்கறிஞர்கள் பலரது கூட்டு முயற்சியில் அரங்கேறியது விசாரணையில் அம்பலமானது. பிரபல ரௌடிகள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பலர் இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இந்த வழக்கில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த வழக்கில் 30 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது காவல்துறை.
இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், 'காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்' எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நூலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வெளியிட்டார். இந்த நிகழ்வின்போது, நல்லகண்ணு காலில் விழுந்து வணங்கினார் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், "ஆம்ஸ்ட்ராங் அண்ணன் சம்பந்தப்பட்டவர்களுடன் நிறைய விவாதித்து வருகிறேன். அரசியல் ரீதியில் என்ன மாற்றம் செய்யப்போகிறோம் என்பது முக்கியம். இங்கு பகுஜன் சமாஜ் கட்சித் தோழர்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள். எனவே ஒரு திட்டத்தோடு 2026 தேர்தல் சூழலை நாம் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்.
ஆம்ஸ்ட்ராங் அவர்களை நாம் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்ற வேண்டும். திருமதி ஆம்ஸ்ட்ராங் அவர்களை திருவள்ளூர் தொகுதியில் வெற்றி பெற வைக்க இப்போது முதலே வேலை செய்ய வேண்டும். நிச்சயமாக நம்மால் ஜெயிக்க முடியும். நம் அண்ணன்கள், தாத்தாக்கள் வட மாவட்டங்களில் தனித்து நின்று வென்ற வரலாறு இருக்கிறது. அதை மீள் உருவாக்கும் செய்யும் வாய்ப்பை உருவாக்குவோம்.
ஒரு தொகுதியை டார்கெட் செய்து வேலை செய்யலாம். ஆம்ஸ்ட்ராங் யார் என்று கேட்டார்களே.. அவர்களுக்கு பதில் சொல்வோம். நான் வேலை செய்யத் தயார். திருவள்ளூர் தொகுதியில் இறங்கலாம். கன்ஷிராம் போல திண்ணை தோறும் போய் உட்காருவோம். இன்னும் 2 வருடங்கள் இருக்கின்றன. சண்டை செய்வோம்.
எங்களை எதைக் கொண்டும் மிரட்ட முடியாது. எதைக் கொண்டும் எங்களை விலைக்கு வாங்க முடியாது. திருமதி ஆம்ஸ்ட்ராங் அவர்களை வெற்றி பெற வைத்து சட்டமன்றத்துக்கு அனுப்புவோம். அவரது வெற்றிக்காக அனைவரும் உழைக்க வேண்டும். நமக்கு ஒரு பிரச்சனை என்றால் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் வந்தார் இல்லையா.. 15 வழக்கறிஞர்களை அனுப்பி அலற விட்டார் இல்லையா?
இன்றைக்கும் தமிழக அரசியல் சூழலில் தலித்களின் ஓட்டு மிக முக்கியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. யார் யாரோ வெற்றி பெறுகிறார்கள்.. நாம் ஏன் வெல்ல முடியாது? இந்தியாவில் 3% இருப்பவர்கள் இந்த நாட்டை ஆளும்போது நம்மால் ஏன் முடியாது? திருமதி ஆம்ஸ்ட்ராங் அவர்களை வெற்றி சட்டமன்றத்துக்கு அனுப்புவோம்." எனப் பேசியுள்ளார்.
மேலும் பேசிய பா.ரஞ்சித், "ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்மந்தப்பட்டு, விசாரணைக்குள் கொண்டுவரப்படாமல் உள்ளவர்களை உள்ளே கொண்டு வர சட்டரீதியான போராட்டத்தை தொடர வேண்டும். இதில் யாரும் விடுபட்டுவிடக்கூடாது. ஒரு கட்சியின் தலைவரை கடந்த 2018-ம் ஆண்டு முதல் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இங்கு இருக்கும் உளவுத்துறை, போலீசார் ஏன் இதை பற்றி சொல்லவில்லை? இது பல கேள்விகளை எழுப்புகிறது. தி.மு.க அ.தி.மு.க என எந்த ஆட்சியில் இந்த சம்பவம் நடந்திருந்தாலும் நாங்கள் கேள்வியை கேட்போம். கேள்வி கேட்பது எங்கள் ஜனநாயக உரிமை." என்றார்.












Click it and Unblock the Notifications