மக்களவையில் ‘தனி ஒருவன்’ பாரிவேந்தர் எம்பி! செயல்பாடு எப்படி? என்ன மார்க்?
சென்னை: பெரம்பலூர் தொகுதி எம்பியான பாரிவேந்தர், தனது 5 ஆண்டு பதவிக் காலத்தில் அவர் எப்படிச் செயல்பட்டிருக்கிறார்? என்ன செய்திருக்கிறார்?
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சிக்கு, இந்த முறை பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஐஜேகே சார்பாக அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் 3 மூன்றாவது முறையாக இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாஜக கூட்டணியில் ஐஜேகே 2 தொகுதிகளைக் கேட்டிருந்தது. ஒன்று, பெரம்பலூர். மற்றொன்று கள்ளக்குறிச்சி. இந்தத் தொகுதிகளில் ஐஜேகே வலுவாக உள்ளது. அப்படி இருந்தும் பெரம்பலூர் தொகுதி மட்டுமே அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக ஐஜேகே சார்பாகப் போட்டியிட்ட போதே 2,38,887 வாக்குகளைப் பெற்றார் பாரிவேந்தர். இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளரே 2,49,645 வாக்குகளை எடுத்திருந்தார்.
திமுக கூட்டணிக் கட்சிகளின் மொத்த வாக்குகளையும் சேர்த்து இவ்வளவுதான் கிடைத்தது. அந்தளவுக்குப் பலமான கூட்டணி சார்பில் அந்தத் தேர்தலில் பாரிவேந்தர் போட்டியிடவில்லை. அப்படி இருந்து திமுக வேட்பாளரைவிட சுமார் 10 ஆயிரம் வாக்குகள்தான் குறைவாகப் பெற்றிருந்தார்.

இதே 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் இவர் போட்டியிட்ட போது 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சொல்லப்போனால் 2014இல் திமுக வேட்பாளர் 2.5 லட்சம்தான் வாங்கி இருந்தார்.
ஆனால், பாரிவேந்தர் 2019இல் அதிமுக வேட்பாளரைவிட 4 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிக் கனியைப் பறித்தார். இதை வைத்தே ஐஜேகே இந்தத் தொகுதியில் எவ்வளவு பலமாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இந்தளவு வாக்கு வித்தியாசத்தில் பாரிவேந்தரை வெற்றி பெற வைத்த பெரம்பலூர் மக்களின் பிரச்சினைகளைக் கடந்த 2019 முதல் 2024 வரையிலான இவரது பதவிக் காலத்தில் மக்களவையில் எந்தளவு இவர் எதிரொலித்தார் என்பது முக்கியமான கேள்வி.

பெரிய அளவுக்குக் கூட்டணிக் கட்சிகளின் பலம் இல்லாமலே தனி ஒருவராக முழுப் பலத்துடன் நாடாளுமன்றத்தில் இவர் செயல்பட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
இவரது பதவிக் காலத்தில் மக்களவையில் இவர் எழுப்பிய கேள்விகள் எத்தனை? செயல்பாடுகள் எப்படி?
இவர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளின் மொத்தம் எண்ணிக்கை 268. அவ்வளவும் வகைவகையான கேள்விகள். பலதரப்பட்ட பிரச்சினைகள்.
இத்தனை பிரச்சினைகளை முன்வைத்து கேள்வி எழுப்பி உள்ளேன் என்கிறார் பாரிவேந்தர். ஆனால், இது பற்றி ஊடகங்கள் பெரிய அளவுக்கு வெளிச்சமிட்டுக் காட்டவில்லை என்றும் சொல்கிறார்.

மக்களவையில் நடைபெற்ற விவாதங்களிலும் இவரது பங்களிப்பு சிறப்பாக இருந்துள்ளது. மக்களவையில் காரசாரமாக நடைபெற்ற 39 விவாதங்களில் பங்கேற்று தனது கட்சியின் நிலைப்பாட்டையும், தங்கள் தொகுதி மக்களின் தேவைகளையும் இவர் முன்வைத்து இவர் பேசி இருக்கிறார்.
மேலும் இவர் 2 தனிநபர் மசோதாக்களைக் கொண்டு வந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒரு எம்பியின் செயல்பாடு எந்தளவுக்கு உள்ளது என்பதைப் படம்பிடித்துக் காட்டும் கண்ணாடிதான் வருகைப் பதிவேடு. அதை வைத்து எந்தளவுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் செயல்பாட்டு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அப்படிப் பார்த்தால், பாரிவேந்தரின் வருகைப் பதிவு 62% இருந்துள்ளது. நாடாளுமன்றம் தனது இணையத் தளத்தில் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் இது தெரிய வந்துள்ளது.

பெரம்பலூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக விதி எண் 377இன் கீழ் பல முக்கியமான பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று அதற்கான விளக்கத்தையும் மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற்றுள்ளார் இவர்.
இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வருகின்றன. ஆனாலும், சுதந்திரமடைந்த இந்த 75 ஆண்டுகளில் பெரம்பலூர் தொகுதிக்கு ரயில் சேவை என்பது வந்து சேரவில்லை. அது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகால கனவுத்திட்டமான அரியலூர்-பெரம்பலூர்- துறையூர் - நாமக்கல் இடையிலான புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்குத் தனி நாடாளுமன்ற உறுப்பினராக நின்று, பல கட்ட முயற்சிகளை பாரிவேந்தர் எடுத்திருக்கிறார்.
இதற்காகப் பிரதமர் மோடி முதல் நிதியமைச்சர், ரயில்வே அமைச்சர் எனப் பலரையும் பார்த்துப் பார்த்து கோரிக்கை வைத்திருக்கிறார்.
அதன் பலனாக 2023 ஜூலை மத்திய அரசு புதிய ரயில் தடம் அமைப்பதற்காக சர்வே பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தது. இவரது முயற்சியால், 50 ஆண்டு கால கனவு கிட்டத்தட்ட நிறைவேறி இருக்கிறது.

இதைப் போலவே காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம். இதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து அழுத்தம் கொடுத்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து வலியுறுத்தினார். இவரது முயற்சியால் தமிழக அரசு இத்திட்டத்தைத் தொடங்குவதற்காக 19.02.2021 அன்று அடிக்கல் நாட்டியது.
சில ஆண்டுகளாகவே வேகம் பெறாமல் கிடப்பில் கிடந்தது சிறுவாச்சூர் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் திட்டம். அதைத் தொடங்குதற்காக மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை வேண்டுகோள் வைத்தார் பாரிவேந்தர். அதற்கானப் பணிகள் முடிந்து இப்போது பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதைப் போலவே சிறுகனூர் புதிய மேம்பாலமும் இவர் எடுத்த அதிவேக நடவடிக்கைகளால் கட்டி முடிக்கப்பட்டு, இப்போது அதை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட லால்குடியில் சிதம்பரம் டு சென்னை தேசிய நெடுஞ்சாலை பணிகள் இன்று நடைபெற்று வருகின்றன. அதுவும் இவரது முயற்சிக்குக் கிடைத்த வெற்றிதான்.
கூடவே இந்தச் சாலைகளில் சர்வீஸ் சாலைகள் மற்றும் கல்லக்குடி, கீழ்ப்பெருங்காவூர், முளப்பதுக்குடி ஆகிய ஊர்களில் சுரங்கப் பாதைகளை அமைத்துத் தந்துள்ளார் பாரிவேந்தர்.
திருச்சி டு சென்னை நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் இருங்களூரில் ஒரு மேம்பாலத்தை புதியதாகக் கட்டப்பட்டுள்ளதைப் பார்க்க முடியும். அது இவரது பதவிக் காலத்தில்தான் கட்டித் தரப்பட்டுள்ளது.
இவரே ஒரு கல்வித் தந்தை. ஆகவே அவரது தொகுதி மக்களுக்கு மத்திய அரசு நடத்தி வரும் கல்வி நிறுவனங்களான கேந்திர வித்யாலயா, சைனிக் ஸ்கூல், வர வேண்டும் பல கட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசிடம் வாதாடி வலியுறுத்தி இருக்கிறார்.
பெரம்பலூர் தொகுதி வறட்சியான பகுதி. சின்ன வெங்காயத்திற்குப் பெயர் போன தொகுதி. ஆகவே உணவுப் பதப்படுத்தும் மையம் அமைத்திட இவர் பலமுறை மத்திய அமைச்சர்களைச் சந்தித்து முறையிட்டுள்ளார். அதேபோல் இரூரில் ஜவுளிப் பூங்கா அமைக்க மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
இப்படி, தனக்குக் கிடைத்த இந்த 5 ஆண்டுகளில் வேறு எந்தக் கட்சியின் உதவியும் இல்லாமல் தனித்து நின்று குரல் எழுப்பி, அதில் வெற்றியையும் அடைந்திருக்கிறார் பாரிவேந்தர்.












Click it and Unblock the Notifications