தனியாரிடம் இருந்த பல்லாவரம் திருநீலகண்டேஸ்வரர் கோயில்.. அதிரடியாக மீட்ட இந்து அறநிலையத்துறை.. ஏன்?
சென்னை: சென்னை பல்லாவரத்தில் திருநீலகண்டேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நகரில் மையப் பகுதியில் இருந்த பல ஏக்கர் நிலம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கோயிலின் நிலங்களை மீட்கும் பொருட்டு தனியார் வசம் இருந்த பல்லாவரம் திருநீலகண்டேஸ்வரர் கோயிலை இந்து அறநிலையத் துறை மீட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான பழையமான கோயில்கள் இருக்கின்றன. இந்த கோயில்களுக்கு சொந்தமான நிலங்களின் மதிப்பு பல கோடி என்கிற அளவில் உள்ளதால், சட்டவிரோதமாக ஆக்கிரமித்து பலர் வீடு கட்டி குடியிருக்கிறார்கள்.. சிலர் ஆக்கிரமித்து விற்பனை செய்திருக்கிறார்கள். இதுபோன்ற முறைகேடுகள் மீது கோயில் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

அப்படி நடவடிக்கை எடுக்காத நிலையில், கோயில்களை தங்கள் வசம் கொண்டுவரும் இந்து அறநிலையத்துறை, அந்த நிலங்களை மற்றும் கட்டிடங்களை மீட்க நடவடிக்கை எடுக்கிறது. அந்த வகையில் சென்னை பல்லாவரம், பெருமாள் நகரில் பிரசித்தி பெற்ற நீலகண்டேஸ்வரர் கோயில் இருக்கிறது. இந்த கோயில் கி.பி.20-ம்நூற்றாண்டை சேர்ந்தது, பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்று சொல்லப்படுகிறது
இந்நிலைலயில் நீலகண்டேஸ்வரர் கோயிலின் பரம்பரை அறங்காவலராக இருந்த துரைசாமி என்பவர் இறந்துபோனார்.. அதன்பிறகு பல்வேறு தனி நபர்கள் கோயிலை நிர்வகித்து வந்தனர். இந்த காலக் கட்டத்தில் கோயிலுக்கு சொந்தமான நகரில் மையப் பகுதியில் இருந்த பல ஏக்கர் நிலம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
ஆனால் இந்த நிலத்தை மீட்க கோயிலை நிர்வகித்து வந்தவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம் கோயில் நிர்வாகத்தில் பல்வேற முறைகேடுகள் நடந்து வருவதாக இந்து அறநிலையத் துறைக்கு பல்வேறு புகார் மனுக்கள் வந்தது. இது தொடர்பாக, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று கோயிலில் விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து, கோயில் நிர்வாக நலன் கருதியும், சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட கோயில் நிலத்தை மீட்கவும் இந்து அறநிலையத் துறை சட்டப்பிரிவு, 49(1)கீழ், திருநீலகண்டேஸ்வரர் கோயிலை, செங்கல்பட்டு மாவட்ட இந்து அறநிலையத் துறையினர், வருவாய், காவல் துறை அதிகாரிகள் இணைந்து நேற்று தங்கள் வசம் கொண்டு வந்தார்கள்
தொடர்ந்து பல்லாவரம் திருநீலகண்டேஸ்வரர் கோயில் தக்காராக, தாம்பரம் செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் கோயில் செயல் அலுவலராக உள்ள தீபா பொறுப்பேற்றார். இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை சார்பாக கோயில் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் கோயிலின் நிர்வாகத்தை தாம்பரம் செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் கோயில் செயல் அலுவலர் கவனிப்பார் என்றும் கோயில் நிர்வாகம் தொடர்பாக இனி அந்த முகவரியை மட்டும் அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications