குருத்தோலை ஞாயிறு- "ஓசன்னா" பாடல்களுடன் களைகட்டிய தேவாலயங்கள்- சிறப்பு பிரார்த்தனை!
சென்னை: குருத்தோலை ஞாயிறு பவனி தமிழ்நாட்டின் தேவாலயங்களில் இன்று நடைபெற்றது. குருத்தோலை ஞாயிறு பவனியை முன்னிட்டு தேவாலயங்களில் இன்று சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
இயேசு பிரான் 40 நாட்கள் உபவாசம் இருந்த ஜெபித்த காலம் தவகாலமாக கிறிஸ்தவர்களாள் போற்றப்படுகிறது. இதன் ஒருபகுதிதான் குருத்தோலை ஞாயிறு. இயேசு பிரான் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக கோவேறு கழுதை மீது ஏற்றப்பட்டு ஜெருசலேம் நகரத்து வீதிகளில் அழைத்துவரப்பட்டார். அப்போது குருத்தோலைகளை கைகளில் பிடித்தபடி ஓசன்னா பாடல்களைப் பாடி இயேசு பிரானை மக்கள் வரவேற்றனர். குருத்தோலை ஞாயிறுக்கு அடுத்த 7 நாட்களையும் பரிசுத்த பாடுகளின் வாரமாக கடைபிடிக்கின்றனர் கிறிஸ்தவர்கள்.

இதனை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு பவனி நிகழ்வுகள் தேவாலயங்களில் இன்று நடைபெற்றன. கிறிஸ்தவ மதத்தின் அனைத்து பிரிவு தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு பவனை இன்று நடைபெற்றது. இதனையொட்டி தேவாலயங்களில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் குவிந்திருந்தனர். குருத்தோலை பவனியில் பங்கேற்ற மக்கள், ஓசன்னா பாடல்களை பாடியபடி பங்கேற்றனர். இதனையடுத்து திருப்பலியில் பங்கேற்றனர். அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் பகுதிகளில் லோக்சபா தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கேற்று பிரசாரத்தையும் தொடங்கினர். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் போட்டியிடும் காங்கிரஸ் எம்பி சசிதரூர், குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.












Click it and Unblock the Notifications