சென்னையின் 2வது ஏர்போர்ட்.. எங்களுக்கும் அந்த வழக்குக்கும் தொடர்பில்லை.. பரந்தூர் போராட்டக் குழு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமூக ஆர்வலர் ஒருவர் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது. எங்களுக்கும் அந்த வழக்குக்கும் தொடர்பில்லை. எங்கள் போராட்டமும், அடுத்த நாங்கள் எடுக்க இருக்கும் சட்டப் போராட்டமும் தொடரும் என்று பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தெரிவித்துள்ளது.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய இருக்கிறது. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் முதல் கட்ட ஒப்புதலை அளித்திருக்கின்றன.

இந்நிலையில் சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 3.5 கோடி பயனிகளை கையாளும் நிலையை அடையும் முன்பே பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் 3.5 கோடி என்ற நிலையை எட்டும் வரையிலான காலத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் எனில் பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு எதிராக 3 ஆண்டுகளை கடந்து அந்த ஊரில் உள்ள போராட்டக்குழு போராடி வருகிறது.
சென்னை விமான நிலையத்துக்கு அருகிலேயே 300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யலாம் என்று பரந்தூர் போராடக்குழு வலியுறுத்தி வருகிறது ஆனால் அந்நிலத்தை கையகப்படுத்துவதற்கான செலவு அதிகரிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துவிட்டது . பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.
பரந்தூர் விமான நிலையம்.. மீண்டும் 8.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசு.. முக்கிய அப்டேட்!
இது குறித்து போராட்டக் குழுவின் தலைவர் ஜி.சுப்பிரமணியன், செயலர் எஸ்.டி.கதிரேசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், "பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து 1,100 நாட்களை நோக்கி போராடி வருகின்றோம். இந்தப் போராட்டம் என்பது இந்த திட்டத்தால் பாதிக்கப்படுகின்ற விவசாயிகளால் நடத்தப்பட்டு வருகிறது.
பரந்தூர் புதிய விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு அனைத்து அரசியல் கட்சிகள், சமூக நல இயக்கங்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் என அனைவரது ஆதரவைப் பெற்று போராடி வருகிறது. சட்டப் போராட்டம் நடத்துவதற்கான உகந்த சூழல், சட்ட வல்லுநர்களின் ஆலோசனை கருதி நீதிமன்றத்தில் வழக்கு எதுவும் தொடராமல் தற்போது வரை காத்திருக்கிறோம்.
இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சமூக ஆர்வலர் ஒருவர் இந்த விமான நிலையம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது. எங்களுக்கும் அந்த வழக்குக்கும் தொடர்பில்லை. எங்கள் போராட்டமும், அடுத்த நாங்கள் எடுக்க இருக்கும் சட்டப் போராட்டமும் தொடரும்," என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications