Parasakthi trailer: யாரா இருந்தாலும் அவன் என் தம்பி தான்! ஹேர் ஸ்டைல் கூட மாறல.. அச்சு அசலாக அண்ணா போலவே சேத்தன்!
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக, டிரைலரில் அண்ணா பேசுவது போல் இடம்பெற்றுள்ள வசனம் ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சேத்தன் அந்த வசனத்தை அச்சு அசலாக அண்ணா போலவே பேசியிருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் பண்டியகை முன்னிட்டு நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பராசக்தி' படம் வரும் சனிக்கிழமை திரைக்கு வர உள்ளது. டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, ரெட் ஜெயண்ட் இன்பன் உதயநிதி வெளியிடுகிறார்.
1964ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படம் தயாராகியுள்ளது. அந்த காலத்தின் அரசியல் சூழல், மாணவர்கள் நடத்திய போராட்டங்கள், பொதுமக்களின் உணர்வுகள் ஆகியவை டிரைலரில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

பராசக்தி படம்
டிரைலரில், சிவகார்த்திகேயன் ரயில்வே துறையில் பணிபுரியும் நபராக அறிமுகமாகிறார். அவருக்கு சகோதரராக அதர்வா நடித்துள்ளார். ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். டிரைலர் தொடக்கத்தில், சிவகார்த்திகேயனுடன் பணிபுரியும் ஒருவர் அவரிடம் இந்தியில் பேசச் சொல்லும் காட்சியில், "இந்த மதராசி டெல்லி போனால் இந்தியில் பேசுவான்... ஆனால் இந்தி பேசுறவன் மதுரைக்கு வந்தா தமிழ் பேசனும்" என்ற வசனம் வருகிறது. இந்த வசனம் தற்போதைய மொழி அரசியல் விவாதங்களுக்கும் இணையாக இருப்பதால் கவனம் பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன்
அதேபோல், நாடு முழுவதும் இந்தி மொழியை அதிகாரப்பூர்வமாக்கும் சட்டம் இயற்றப்பட உள்ளதாக படத்தில் காட்டப்படுகிறது. இதனால் எழும் எதிர்ப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. தனது அண்ணனான சிவகார்த்திகேயனை நோக்கி அதர்வா, "இந்தியை திணிக்கும் மத்திய சர்க்காருக்கு அடிமை வேலை பார்த்து நல்ல சம்பாதிக்கிறானே" என்று சொல்லும் டயலாக் பலரை சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
அண்ணா வசனம்
மேலும், "நாங்கள் இந்திக்கோ, இந்திக்காரங்களுக்கோ எதிரியானவர்கள் இல்லை... இந்தி திணிப்புக்குத்தான் எதிரியானவர்கள்" என்ற வசனம் திரைப்படத்தின் மையக் கருத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது. அண்ணா பாத்திரத்தைப் பற்றிய காட்சிகளும் டிரைலரில் இடம்பெற்றுள்ளன. அண்ணாவிடம் ஒருவர், "இந்தப் போராட்டத்துக்கு நீங்கள்தான் காரணமா?" என்று கேட்க, அவர் "நான் இல்ல... ஆனா இத பண்ணவங்க யாரா இருந்தாலும் அவன் என் தம்பி தான்" என்று சொல்லும் காட்சி ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி தருகிறது.
சேத்தன் நடிப்பு
டிரைலரின் இறுதியில், சிவகார்த்திகேயன் பேசும் "செந்தமிழை காக்க பெரும் சேனை ஒன்று உண்டு" என்ற வசனம், திரைப்படத்தின் உணர்ச்சி உச்சமாக அமைகிறது. இதனால், படம் குறித்து ரசிகர்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக அண்ணா குறித்த காட்சி தான் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
அறிஞர் அண்ணா
சிறையில் இருப்பது போல அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிப் பின்னணியில் நடிகர் சேத்தன் இந்த வசனத்தை பேசுகிறார். பார்ப்பதற்கு அண்ணா போலவே அச்சு அசலாக சேத்தன் இருப்பதாக ரசிகர்கள் சிலாகித்துக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தம்பி என குறிப்பிடுவதன் மூலம் கலைஞர் கருணாநிதி கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications