பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்! முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து 17 நாள் போராட்டத்தை கைவிட்டனர்!
சென்னை: 17 நாட்களாக சென்னையில் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள் கொடுத்த உறுதியின்படி, எங்களுக்கு பாதகம் இல்லாத அரசாணை வரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம் என பகுதிநேர ஆசிரியர்களின் கூட்டியக்கம் அறிக்கை விடுத்துள்ளது.
சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்துப் பேசினார். முதல்வரின் பதிலுரையை அதிமுக புறக்கணித்தது. முதல்வர் ஸ்டாலின் தனது பதிலுரையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, பகுதி நேர ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய ஏதுவாக, அதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் பேசுகையில், "அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளில், ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறை காலமான மே மாதத்தில் அவர்கள் கோரிய ஊதியம் ஆகியவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் முக்கிய கோரிக்கையான நிரந்தரப் பணி நியமனத்தைப் பொறுத்தவரைக்கும் ஒரு அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்.
அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கக்கூடிய நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில், பகுதிநேர ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்தார்.
முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பணி நிரந்தரம் கோரி கடந்த 17 நாட்களாக பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வந்தனர். சிறப்பு மதிப்பெண் மூலம் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று பேரவையில் முதல்வர் உறுதியளித்திருந்தார். இதையடுத்து எங்களுக்கு பாதகம் இல்லாத அரசாணை வரும் என்ற நம்பிக்கையில் போராட்டம் ஒத்திவைப்பு என பகுதிநேர ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தர பணி நியமனம் செய்திட, சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும் என்று அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications