இதுவா வாரிசு அரசியல்? இவ்வளவு துயரங்களை அனுபவிச்சிருக்காரே.. முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த பார்த்திபன்!
சென்னை : "பொறுமையாலும், தனது போராட்ட குணத்தாலும் தான் இன்று பல இன்னல்களுக்கு மத்தியில் அவர் முதல்வராக உயர்ந்துள்ளார். பல ஆண்டுகளாக தன்னுடைய திறமையை மெருகேற்றி இந்த இடத்தை பிடித்துள்ளாரே தவிர வாரிசு அரசியலால் அவர் முதல்வராக வரவில்லை." என நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில், முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, அவரது பொறுமையின் காரணமாகவே முதலமைச்சர் பதவி கிடைத்ததாக நடிகர் பார்த்திபன் பேசியுள்ளார்.

முதல்வர் பிறந்தநாள் விழா
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை கொளத்தூரில் மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள் என்ற தலைப்பில் பொதுக்கூட்ட விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், பேச்சாளர் முனைவர் பர்வீன் சுல்தானா, கர்நாடக இசைக்கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் ரியல் ஹீரோ
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் பார்த்திபன், "எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தால் நான் மற்றும் என்னைச் சார்ந்த 10 பேர் நல்லா இருப்போம். ஆனால், முதல்வரை வாழ்த்தினால் ஒரு நாடே சிறப்பாக இருக்கும். முத்தமிழறிஞருக்கு மகனாக பிறந்ததே அவருக்கு பெரிய வாழ்த்து தான். அதை விட வேறு என்ன பெரிய வாழ்த்து இருக்க போகிறது? சினிமாவில் நடிகராக நடிப்பது சுலபம். ஆனால், கொரோனா காலகட்டத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தானே களத்திற்கு சென்றார். அவரை நான் ரியல் ஹீரோவாக பார்க்கிறேன்.

பல துயரங்களுக்கு
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் புகைப்பட கண்காட்சியில் பல புகைப்படங்களை பார்த்தேன். அப்போது தோன்றிய விஷயம், சாதாரணமாக ஒரு பணக்காரர் வீட்டு பையனே ஒழுங்காகப் படிப்பது கிடையாது. ஒரு மிகப்பெரிய அரசியல் கட்சி தலைவரின் மகனாக இருந்தாலும் பல துயரங்களுக்கு ஆளான காட்சிகளை கண்டேன். நம் முதல்வரின் பொறுமை கடலினும் பெரிது. அந்த பொறுமையாலும், தனது போராட்ட குணத்தாலும் தான் இன்று பல இன்னல்களுக்கு மத்தியில் அவர் முதல்வராக உயர்ந்துள்ளார்.

வாரிசு அரசியல் அல்ல
முதல்வர் ஸ்டாலின் இந்த இடத்திற்கு வந்தது ஒரு கேக் வாக் போல அல்ல. கட்சிக்காரனாக எல்லாம் இல்லாமல் சொல்கிறேன். இது வாரிசு அரசியல் இல்லை. பல நாட்களாக தன்னுடைய திறமையை மெருகேற்றி அந்த இடத்தை பிடித்துள்ளாரே தவிர வாரிசு அரசியலால் அவர் முதல்வராக வரவில்லை. உடலளவில் மட்டும் அல்ல மனதளவிலும் ஆரோக்கியமானவர் நம் முதல்வர். எல்லாருக்கும் முன்னோடியாக அவர் இருக்கிறார். எளிமையாக பழகக் கூடியவர்." எனப் பாராட்டிப் பேசியுள்ளார் பார்த்திபன்.












Click it and Unblock the Notifications