நில பத்திரம்.. பட்டா வேணுமா? இவங்க எல்லாம் ரெடியா இருங்க.. சென்னைக்கு குட்நியூஸ் தந்த தமிழக அரசு
சென்னை: பட்டா வழங்குவதில் எத்தனையோ நிர்வாக சிக்கல்கள் இருந்தாலும், மக்களுடைய மகிழ்ச்சிதான் முக்கியம் என்ற அடிப்படையில், சிக்கல்கள் களையப்பட்டு பட்டாக்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நீலாங்கரையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..

நிகழ்ச்சி: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1,984 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
உதயநிதி: அப்போது உதயநிதி பேசும்போது சென்னையில் வட்ட வாரியாக வழங்கப்பட உள்ள பட்டாக்கள் எவ்வளவு என்பது குறித்து விரிவாக பேசினார்.. தொடர்ந்து உதயநிதி பேசியதாவது:
"சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வீட்டுமனை பட்டா பெறுவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையின் சார்பில் கடந்த மார்ச் 1ம்தேதி, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீட்டுமனை பட்டா வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க அமைச்சர் உட்பட 18 உறுப்பினர்கள் கொண்ட மாநில அளவிலான உயர்நிலை குழுவும் அமைக்கப்பட்டது.
கிரைய பத்திரங்கள்: இந்தக் குழுவானது, கடந்த ஜுன் மாதம் ஒன்றுகூடி விவாதித்தது.. குறிப்பாக பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கிரைய பத்திரங்கள் வழங்கப்பட்ட மனைகளுக்கு பட்டா வழங்குவது, தமிழக வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கிரைய பத்திரங்கள் வழங்கப்பட்ட மனைகளுக்கு பட்டா வழங்குவது, ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை வருவாய் ஆவணங்களில் பதிவேற்றம் செய்து கணினி பட்டா வழங்குவது, சென்னை பெருநகர வளர்ச்சி குழும மனைகளுக்கு பட்டா வழங்குவது போன்றவற்றிலுள்ள சிக்கல்கள் குறித்தும், அந்த சிக்கல்களுக்கு தீர்வுகள் குறித்தும் விவாதித்தது.
அறிவுரைகள்: பின்னர், இது தொடர்புடைய துறைத்தலைவர்களுக்கும், சென்னை மாவட்ட ஆட்சியருக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கியது.. இதன் அடிப்படையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மனை இடங்களில் 411 பட்டாக்கள் உட்பட மொத்தம் 28,848 பட்டாக்கள் பொதுமக்களுக்கு அரசால் வழங்கப்படவுள்ளது. தற்போது சோழிங்கநல்லூர் பகுதியில் கிட்டத்தட்ட 2,000 பயனாளிகளுக்கு வீட்டு மனைக்கான பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக கட்டிட அனுமதி ஆன்லைன் மூலமாக உடனடியாக பெற வேண்டும் என்ற திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்திருக்கிறார். வீடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அந்த வீட்டுக்கான பட்டாவும் மிக மிக முக்கியம். காரணம், பட்டா வேண்டும் என்பவருடைய பல வருட கனவு இன்று நனவாகிவிட்டது.. அதிலும், சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தி்ன்போது, நிச்சயம் பட்டா வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நான் தந்திருந்தேன்.
வாக்குறுதிகள்: தேர்தல் முடிந்து 2 மாதம்தான் ஆகியிருக்கிறது. அதற்குள்ளேயே இந்த 2 மாதத்திற்குள், முதல்வர் ஸ்டாலின் தான் தந்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார்.. பட்டா வழங்குவதில் எத்தனையோ நிர்வாக சிக்கல்கள் இருந்ததால், அத்தனையையும் முதல்வர் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது..
ஆனால், எத்தனை சிக்கல்கள் இருந்தாலும் சரி, மக்களுடைய மகிழ்ச்சி தான் முக்கியம், அந்த சிக்கல்களை எல்லாம் தீர்க்க வேண்டும் என்று முதல்வர் ஆணையிட்டார்.. அதன்படியே இன்றைக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது" என்றார் உதயநிதி.












Click it and Unblock the Notifications