பட்டா நிலம் இருக்கா? விவசாயிகளுக்கு சூப்பர் சான்ஸ்.. இ-வாடகை மூலம் வேளாண் கருவிகள்! நீலகிரி ஹேப்பி
சென்னை: இ வாடகை செயலி மூலம், பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், பட்டா நிலம் உள்ள விவசாயிகளுக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வழங்கியிருக்கிறார்.
தமிழகத்தை பொறுத்தவரை, வேளாண் துறையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. விதைப்பு முதல் அறுவடை முடிய அனைத்து சாகுபடி பணிகளையும் வேளாண் இயந்திரங்கள் மூலமாக மேற்கொள்வதற்காக முனைப்பு காட்டி வருகிறது என்றாலும், ஏராளமான விவசாயிகளுக்கு சொந்தமாக வேளாண் கருவிகள் கிடையாது.

இ வாடகை: எனவேதான், வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் தங்களுடைய வீட்டிலிருந்தபடியே, ஆன்லைனில் ரிசர்வ் செய்துகொள்ளும் "இ-வாடகை" என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த செயலி மூலம், பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
இ-வாடகை செயலி, சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட் நிறுவும் திட்டம், உழவர் சந்தை திட்டத்தை வலுப்படுத்தும் திட்டம், சிறு, குறு விவசாயிகளை இளைஞர்களுக்கு பயிற்சி, வேளாண்மையில் தொழில்முனைவோர்களை உருவாக்குதல், விளைபொருள்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற ஏராளமான நலத்திட்டங்களை தமிழக அரசு விடாமல் முன்னெடுத்து வருகிறது.
உழவன் செயலி: அதேபோல,, "உழவன் செயலி" திட்டத்தையும் தமிழக அரசு கடந்த 2018-ல் அறிமுகப்படுத்தியிருக்கிறது.. இந்த உழவன் செயலியில் 22 வகையான சேவைகள் உள்ளன.. இப்போது, அனைத்து விவசாயிகளிடமும் செல்போன் உள்ளதால், வேளாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களை கைபேசி மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது தான் இந்த உழவன் செயலி.
இப்படிப்பட்ட சூழலில், இ--வாடகை திட்டத்தில் உழவர் செயலியின் மூலம் குறைந்த செலவில் வேளாண் கருவிகளை வாடகைக்கு பெற்று விவசாயிகள் பயன் பெறலாம் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
வேளாண் இயந்திரம்: மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கையில், "நீலகிரி மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் மண் தள்ளும் இயந்திரம் ஆகியவை ஒரு மணி நேரத்திற்கு, 1,230 ரூபாய் மற்றும் டிராக்டர் இணைப்புகளான சுழல் கலப்பை, 9 கொத்து கலப்பையுடன் ஒரு மணி நேரத்திற்கு, 500 ரூபாய் வாடகைக்கு விடப்படுகிறது.
மேலும், 'வேளாண் பொறியியல் துறையில் சக்கரவகை நெல் அறுவடை இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு, 1,160 ரூபாய்; டிராக்டர் வகை நெல் அறுவடை இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 1,880 ரூபாய்; சக்கரவகை மண் அள்ளும் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு, 890 ரூபாய்; டிராக்டர் வகை மண் அள்ளும் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு, 1,910 ரூபாய்;மினி டிராக்டர் ஒரு மணி நேரத்திற்கு, 460 ரூபாய் என, பல்வேறு வேளாண் கருவிகள் வாடகைக்கு விடப்படுகிறது.
பட்டா நிலம்: இத்திட்டத்தில் பயன் பெற பட்டா நிலம் உள்ள விவசாயிகள் உழவர் செயலியில் உரிய விபரங்களை பதிவு செய்து வீட்டில் இருந்து கொண்டே விண்ணப்பித்து பயன் பெறலாம்.
விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளர்கள், ஊட்டி:0423-- 2960257; கூடலூர்: 04262-296599 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications