பட்டா, நில அளவை.. வீடு, மனை சொத்து வாங்குவோருக்கு ஹேப்பி.. தமிழக அரசின் புதிய வசதி.. இனிமேல் நிம்மதி
சென்னை: வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்குவோர்களின் வசதிக்காகவே, புதிய வசதியை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.. இது தொடர்பான வெப்சைட் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருப்பது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
ஒரு சொத்தை வாங்கும்போது, அதன் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம்தான் வில்லங்க சான்றிதழாகும். இந்த சொத்து இதற்கு முன்பு யாரிடம் இருந்தது? எந்தெந்த ஓனர்கள் சொத்தினை அனுபவித்தார்கள்? என்பவை இந்த வில்லங்க சான்றிதழில் பதிவாகியிருக்கும். அந்த சொத்துக்களில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்யவே, வில்லங்க சான்றிதழ்கள் தேவையாயிருக்கின்றன.

சொத்து வழக்குகள்: ஆனால், சொத்து தொடர்பான வழக்கு விபரங்கள், நீதிமன்ற தடை உத்தரவுகள் எதுவும், வில்லங்க சான்றிதழ்களில் தெளிவாக தெரிவதில்லை. சொத்து உரிமை மாற்றம் தொடர்பாக கோர்ட் பிறப்பித்த உத்தரவை, சம்பந்தப்பட்டவர்கள் சார் - பதிவாளரிடம் தாக்கல் செய்தால் மட்டுமே, அதுகுறித்து தெரியவரும்..
மற்றபடி வழக்குகள் நிலுவையில் இருப்பது, அதன் தற்போதைய நிலவரம் இதெல்லாம் மக்களுக்கு தெரிவதில்லை. இந்த வழக்கு விபரம் எதுவும் தெரியாமல், அந்த சொத்துக்களை வாங்கிட நேர்ந்துவிடுகிறது.. பத்திரப்பதிவுக்கு போகும்போதுதான், வழக்குகள் பற்றி தெரியவருகிறது. ஆனால், அந்த நேரத்தில் வேறு எதையும் செய்ய முடிவதில்லை.. இந்த சிக்கலை தீர்க்கவே வருவாய் துறை முக்கிய அதிரடியை கையிலெடுத்து வருகிறது.
பட்டா, நில அளவை: அதன்படி, பட்டா, "அ" பதிவேடு, நில அளவை வரைபடம் போன்ற விபரங்களை, ஆன்லைன் முறையில் பொது மக்கள் பெற வேண்டும் என்பதற்காக இ - சேவை இணையதளத்தில் வசதி செய்யப்பட்டு உள்ளது... அதாவது, நிலங்களின் அனைத்து வகை தகவல்களையும், ஒரே இணையதளத்தில் பெறும் வகையில் ஒருங்கிணைந்த தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது... இந்த வசதியை, www.clip.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மக்கள் பெறலாம்.
இந்த தளத்தில், பட்டா மேல்முறையீடு தொடர்பாக, வருவாய் நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகளையும், உரிமையியல் வழக்குகள் குறித்த விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். வழக்கு பதிவு எண் அடிப்படையில் விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
விரைவில் வசதி: இதற்காக, மாவட்ட நீதிமன்றங்களின், ஆன்லைன் சேவை வசதி, வருவாய் துறையின் ஒருங்கிணைந்த இணையதளத்தில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிகிறது.. இந்த வசதியை மக்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருவாய்த்துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஆக சொத்துக்களை வாங்குவோர், அது தொடர்பாக நிலுவையில் உள்ள சிவில் வழக்கு விபரங்களை எளிதாக அறிய, வருவாய் துறை இணையதளத்தில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பது, மிகுந்த மகிழ்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications