உங்களை பல்லக்குல தூக்கினு வந்தவாளுக்கு கால் வலிச்சா? செவுளில் அறையும் 'வேதம் புதிது' சினிமா காட்சி
சென்னை: தமிழகத்தில் ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்லும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் சாமியார்களை பல்லக்கில் தூக்கி செல்வதை விமர்சித்து வேதம் புதிது திரைப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா பதிவு செய்திருந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்தப்படும். அன்றைய தினம் ஆதீனத்தைப் பல்லக்கில் தூக்கி சுமந்து வீதி உலா செல்வர்.

ஆதீனம் பட்டினப் பிரவேசம்
ஆனால் இந்த நூற்றாண்டிலும் கூட மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப் பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்குத் திராவிடர் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த ஆண்டும் திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் பட்டினப் பிரவேசம் நடந்தது. நடப்பாண்டிலும் பட்டினப்
பிரவேச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கும் திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது.

தமிழக அரசு தடை
இதனையடுத்து ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் தூக்கினால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும்; மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் இந்த நிகழ்ச்சியைத் தடை செய்திடக் கோரி அனுப்பிய அறிக்கையின் படியும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23-ன் படி சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதாலும், பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்படுகிறது எனக் கோட்டாட்சியர் பாலாஜி அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

சட்டசபையில் விவாதம்
தற்போது பட்டினப் பிரவேசத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பாக தமிழக சட்டசபையிலும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு விவாதிக்கப்பட்டது. பட்டினப் பிரதேச விவகாரத்தில் சுமூக தீர்வு காணப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோசியல் மீடியாவில் வேதம் புதிது
இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவின் வேதம் புதிது திரைப்படத்தில் இடம்பெற்ற சாமியார்களை பல்லக்கில் தூக்கி செல்வதை விமர்ச்சிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த வீடியோ காட்சியை முன்வைத்து காரசாரமான விவாதங்களும் நடைபெறுகின்றன. வேதம் புதிது திரைப்படம் பல்வேறு பழமைவாத கருத்துகளுக்கு சம்மட்டி அடி கொடுத்தது. அது வெளியான காலத்திலேயே கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது.

பகிரப்படும் காட்சியில் உள்ளது என்ன?
இப்போது பகிரப்பட்டு வரும் வேதம் புதிது சினிமா படத்தின் காட்சியில் இடம்பெற்றுள்ளது: பிராமண சிறுவன் ஒருவன், சாமியாரிடம் இப்படி கேட்கிறார்....
சிறுவன்: ஸ்வாமி, நேக்கு ஒரு சந்தேகம்.. உங்களை ஏன் பல்லக்கில் தூக்கினு வந்தா?
சாருஹாசன்: டேய்.. நீண்ட பயணமாடோ..அவாளுக்கு கால் வலிக்கும்னோ என்னோ.. அதால பல்லாக்குல வந்தா.. சும்மா இர்றா
சிறுவன்: அப்போ.. உங்களை பல்லக்குல தூக்கினு வந்தவாளுக்கு கால் வலிச்சா..
(அதிர வைப்பது போன்ற மியூசிக்குடன் சாமியார் அங்கிருந்து நகருவார்.. பின்னர் தம்மை தூக்கி சுமக்க இருந்த பல்லக்கின் முன்பு நின்று பேசுவார்)
சாமியார்: சிவ..சிவா.. எல்லா சுமையையும் இறக்கி வெச்சுட்டதா நினைச்சேன்.. அது இல்லைன்னு பகவான் ஒரு குழந்தை ரூபத்துல சொல்லிட்டார்... இனி நான் யாருக்கும் சுமையா இருக்க விரும்பலை.. நேக்கு பல்லாக்கு வேண்டாம்.. இவ்வாறு கூறி விட்டு பாதயாத்திரையாக சாமியார் நடந்து செல்வார். இந்த வீடியோ காட்சிதான் இப்போது பலராலும் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டும் வருகிறது.












Click it and Unblock the Notifications