செல்போன்... ஏசி ரூம், லேப் டாப் என மாறிய மடாதிபதிகள்... பல்லக்கை விட மறுப்பது ஏன்? - பழ.நெடுமாறன்
மடாதிபதிகள் யாராக இருந்தாலும் காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை விட்டு விட்டு ஒத்து வாழவேண்டும். இல்லையென்றால் மக்களால் புறக்கணித்து வைக்கப்படுவார்கள் என பழ நெடுமாறன் கூறியுள்ளார்.
சென்னை: பாரம்பரியத்தை கை விட்டு செல்போன், லேப் டாப் வைத்திருக்கும் மடாதிபதிகள் ஏசி காரில் பவனி வருகிறார்கள் என்று பழ நெடுமாறன் கூறியுள்ளார். தற்போது காலத்திற்கு ஏற்ப வசதிகளைப் பயன்படுத்தும் மடாதிபதிகள், மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் பழமையான சைவ மடங்களில் ஒன்று, மயிலாடுதுறை மாவட்டத்தின் தருமபுரம் ஆதீனம் . இந்த மடம் 16ம் நூற்றாண்டில் இருந்து செயல்பட்டு வருகின்றது. இம்மடத்தில் ஆண்டு தோறும் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தில் பட்டினப் பிரவேசம் எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர்த்தி, ஆதீன சீடர்கள், பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்.
தருமபுரம் ஆதீனத்தின் 27வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த பொறுப்பில் உள்ளார்.
தமிழக ஆளுநர் ஒரு சூரியன்.. ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் பேச்சு
பட்டினப்பிரவேச சர்ச்சை
2022ம் ஆண்டுக்கான பட்டினப் பிரவேச விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது தருமபுரம் ஆதீனம். இந்த நிலையில், ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச்செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்திருக்கிறார்.
சட்டசபையில் விளக்கம்
அதே நேரம் பட்டின பிரவேச தடைக்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது. ஆன்மீகவாதிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தடை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. எதிர்கட்சியினர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரவே விவாதம் நடைபெற்றது. முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
பழ.நெடுமாறன் கண்டனம்
இதுகுறித்து, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர், ''பல்லக்கில் பவனி வருவது பாரம்பரிய பழக்கமாகும். அதை ஒருபோதும் கைவிட மாட்டோம் என சொல்லும் மடாதிபதிகள், தங்களின் மடத்து அறையில் குளிர்சாதனம் பொருத்தி இருக்கிறார்கள். குளிர்சாதனம் பொருத்தப்பட்ட விலை உயர்ந்த கார்களில் பவனி வருகிறார்கள்.
காலத்திற்கு ஏற்ப மாறலாமே
தொலைபேசி, கைபேசி, கணினி, வானொலி, தொலைக்காட்சி போன்ற நவீன சாதனங்களை மடங்களில் வைத்திருப்பது ஏன்? என்று கேட்கிறார். பக்தர்களுக்கு அருள் உரையாற்றும்போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்துகிறார்கள். இவற்றையெல்லாம் மடாதிபதிகள் பயன்படுத்தும்போது மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
Recommended Video
மக்கள் புறக்கணிப்பார்கள்
மடாதிபதிகள் யாராக இருந்தாலும் காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை விட்டு விட்டு ஒத்து வாழவேண்டும். இல்லையென்றால் மக்களால் புறக்கணித்து வைக்கப்படுவார்கள் என எச்சரிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.