சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு இல்லை? முயல்கள் காரணமா?
சென்னை: சென்னை திருவொற்றியூரில் உள்ள விக்டரி பள்ளியில் எந்த வாயுக் கசிவும் இல்லை என தகவல் கிடைத்துள்ளது. பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில் வாயு கசிவு இல்லை என சொல்லப்படுகிறது.
சென்னை திருவொற்றியூரில் விக்டரி பள்ளியில் கடந்த மாதம் 25 ஆம் தேதி திடீரென வாயுக் கசிவால் 35 மாணவர்கள் மயங்கி விழுந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில் பள்ளிக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே பள்ளியை திமுக எம்பி கலாநிதி வீராசாமி, பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் விக்டரி பள்ளி 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கடந்த 4ஆம் தேதி மீண்டும் திறப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து பள்ளி நிர்வாகத்துடன் அன்றைய தினம் காலை வாக்குவாதம் செய்தனர். வாயுக் கசிவு எதனால் வந்தது, அதை சரி செய்தாகிவிட்டதா போன்ற எந்த கேள்விகளுக்கும் விடைச் சொல்லாமல் பள்ளியை திறக்கக் கூடாது என வாக்குவாதம் செய்தனர்.
அப்போது சில மாணவிகள் தங்கள் வகுப்பறைக்குச் சென்றனர். அப்போது அவர்களில் 9 மாணவிகளுக்கு அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்டது. சிலருக்கு மூச்சுத்திணறலும் இருந்ததால் பதறிய பெற்றோர் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து பள்ளிக்கு நவம்பர் 4ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளியை கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து வாயுக் கசிவிற்கான காரணத்தை கண்டறியும் வரை , அதாவது மறு அறிவிப்பு வரும் வரை பள்ளியை தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிட்டிருந்தனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினரும் அன்றைய தினம் பேட்டி அளித்த போது , "பள்ளியில் எந்த வாயுக் கசிவும் இல்லை. பள்ளியை ஒரு முறை சுத்தம் செய்துவிட்டுத்தான் மீண்டும் திறக்க முடிவு செய்தோம். இது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும்" அவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் பெற்றோர்களோ, "எங்களிடம் அது போல் எந்த கருத்தையும் பள்ளி நிர்வாகம் கேட்கவில்லை. நாங்கள் வாயுக் கசிவு குறித்து கேட்ட போது கூட வேண்டுமானால் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்றுதான் பதில் அளித்தனர் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்றும் இந்த பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பள்ளியில் வாயுக் கசிவு இல்லை என தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் பள்ளி வளாகத்தில் முயல்கள் வளர்ப்பதால் துர்நாற்றம் வீசியதா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications