'பேனா நினைவு சின்னம்..' நல்ல நோக்கத்திற்காக செய்கிறார்கள்.. நாம் பாராட்ட வேண்டும்.. சொல்வது ஓபிஎஸ்
கருணாநிதியை எனக்கு உறுதியாக பிடிக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
சென்னை: பேனா சின்னத்தை உடைப்பேன் என்று சீமான் கூறுவது குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். எந்த ஒரு அரசியல் கருத்து சொன்னாலும் அதை நாகரிகமாக தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்தார். மேலும் கருணாநிதியை எனக்கு உறுதியாக பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே ரூ.81 கோடி செலவில் 42 மீட்டர் உயரத்தில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆதரவு ஒரு பக்கம் எதிர்ப்பு ஒரு பக்கம் கடும் சலசலப்பு ஏற்பட்டது. பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக அரசியல் தலவர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
கருணாநிதி பேனா சின்னம்: சுனாமி, நிலநடுக்கம் ஒன்னும் செய்யவே முடியாதாம்.. அவ்ளோ பக்கா ப்ளானாம்!
ஓ பன்னீர் செல்வம் பேச்சு
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கள் அணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பெயரை அறிவித்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பேனா நினைவு சின்னம் பற்றி உங்கள் கருத்து என்ன செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது:- பேனா நினைவு சின்னம் அமைக்கும் விவகாரத்தில் பொதுமக்கள் கருத்து தான் எங்களின் கருத்தும் ஆகும்.
சீமான் கூறுவது குறித்து..
பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது அதன் முடிவு வரட்டும். அதனால் என்ன பயன்? பயனில்லை? என்பது குறித்து அதிமுக சார்பில் நீண்ட விளக்கம் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. பேனா சின்னத்தை உடைப்பேன் என்று சீமான் கூறுவது குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். எந்த ஒரு அரசியல் கருத்து சொன்னாலும் அதை நாகரிகமாக தெரிவிக்க வேண்டும். திமுக ஆட்சி நடத்திகொண்டு இருக்கிறது. ஒரு மிகப்பெரிய கட்சியின் தலைவர். தற்போது ஆளும் கட்சியின் மூத்த தலைவருக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்படும் போது எதனால் எதிர்க்கிறோம் என்பதை எதிர்ப்பவர்கள் விளக்க வேண்டும்.
அதனால் என்ன பயன் இருக்கிறது
அதை ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ எங்கள் நிலைப்பாடு அல்ல. நல்ல நோக்கத்திற்காக அவர்கள் செய்கிறார்கள், அதை நாம் பாராட்ட வேண்டும். பொதுமக்கள் கருத்து பலவாறு வந்து கொண்டு இருக்கிறது. அதனால் என்ன பயன் இருக்கிறது என்பதை நாங்கள் அலசி ஆராய்வோம். பல்வேறு நினைவுச் சின்னங்கள் தேசிய தலைவர்களுக்கும், மாநிலத் தலைவர்களுக்கும் அமைக்கப்படுகிறது. அதன் நோக்கம் என்ன? அதனால் பயன் என்ன? என்பதை கலந்து பேசி நல்ல முடிவுக்கு வர வேண்டும்.
நாகரிகமாக சென்று கொண்டிருக்கிறது
கருணாநிதியை எனக்கு உறுதியாக பிடிக்கும். நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தோம். எங்கள் அரசியல் பாணி 1972-ல் இருந்து நாங்கள் வேறு அவர்கள் வேறு என்றாகிவிட்டது. எங்களுடைய அரசியல் கருத்துக்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நாகரிகமாக சென்று கொண்டிருக்கிறது. அரசு இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இல்லாவிட்டால் ஏன் பொதுமக்கள் கருத்தை கேட்கிறார்கள். தேசிய தலைவர்களுக்கு நினைவு சின்னம் அமைக்கும் போது தேவையா.. இல்லையா என்ற கருத்தில் உள்ளே போகக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.