பென்சன் வரவே வராதா? ஓய்வூதியக்குழு இடைக்கால அறிக்கை! தலைமை செயலக பணியாளர்கள் தந்த திடீர் அறிவிப்பு
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தன்னுடைய கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மேலும் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசமும் அக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.. இதற்கு தலைமைச்செயலக சங்கம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.. இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றையும் தற்போது வெளியிட்டிருக்கிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது.

9 கருத்துக்கேட்பு கூட்டங்கள்
பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து,9 மாதங்களில் அரசுக்கு அளிக்க ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், 3 அதிகாரிகள் கொண்ட குழு கடந்த பிப்ரவரி மாதம் அரசால் அமைக்கப்பட்டது.
மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்து, செப்டம்பர் மாதத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படியே, 194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் 9 சுற்று கூட்டங்களை அக்குழு நடத்தியது..
கால அவகாசம் தேவைப்படுகிறது
ஆனால், சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் மற்றும் தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், மத்திய அரசு, சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் போன்றவற்றுடன் மேலும் கலந்தாய்வுகள் நடத்த வேண்டியிருப்பதாலும் சற்று கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.
இந்த சூழலில்தான், ஓய்வூதிய திட்டங்கள் குறித்த தன்னுடைய இடைக்கால அறிக்கையினை அரசுக்கு, அக்குழுவானது நேற்று சமர்ப்பித்துள்ளது. மத்திய அரசு, நிதிநிறுவனங்கள், எல்ஐசி ஆகியவற்றுடனான கலந்தாய்வுகள் மேற்கொண்ட பிறகு, குழு தன்னுடைய இறுதி அறிக்கையினை விரைவில் அரசுக்கு சமர்ப்பிக்கும் என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது..
தலைமைச் செயலக சங்கம் கண்டனம்
ஓய்வூதியம் தொடர்பான குழுவுக்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. அத்துடன் ஓய்வூதியக்குழு தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், கருப்பு பேட்ஜ் அணிந்து வரும் 6ம் தேதி பணியாற்ற போவதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் சு.ஹரிசங்கர் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்..
நம்பகத்தன்மையை இழந்த ஓய்வூதியக்குழு
அதில், சட்டப்பேரவையில் விதி எண் 110-ன்கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புக்கு மாறாக, அரசின் ஓய்வூதியக் குழு தனது அறிக்கையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வழங்காமல், அதே தேதியில் இடைக்கால அறிக்கையை அளித்துள்ளது.
இது சட்டப்பேரவை அறிவிப்பை மீறும் செயல். கால நீட்டிப்பு குறித்து அரசிடம் நேரடியாக கோராமல், மறைமுகமாக கேட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இடைக்கால அறிக்கை அளித்ததன் மூலம் ஓய்வூதியக்குழு தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.
கருப்பு பேட்ஜ் - எதிர்ப்பு
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தலைமைச் செயலக பணியாளர்கள் அக்.6-ம் தேதி திங்கள்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவார்கள். முதல்வர் இந்த விஷயத்தின் தீவிரத்தை மனதில் கொண்டு, உடனடியாக தலையிட்டு, திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும்" என்று கூட்டாக தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் ஓய்வூதியக்குழு இடைக்கால அறிக்கை அளித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தலைமைச் செயலக பணியாளர்கள் வரும் 6-ம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற போவது மிகுந்த பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications