ஆளுக்கு 1000 ரூபாய்.. 250 கோடி செலவு செய்றாங்க.. இதுதான் மதுரை அதிமுக மாநாடு.. டிடிவி தினகரன் தாக்கு
சென்னை: மதுரையில் வரும் 20 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாடு நடக்க இருக்கிறது. இந்த நிலையில், மதுரை மாநாட்டுக்கு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து அழைக்கிறார்கள் என டிடிவி தினகரன் விமர்சித்து பேசியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக தனது பலத்தை காட்டும் வகையில் வரும் 20 ஆம் தேதி மதுரையில் பிரம்மண்ட மாநாடு நடத்த உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக மாநாடு குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.

மேலும் பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தால் அமமுக இடம் பெறுமா? என செய்தியாளர்கள் கேட்டதற்கும் பதில் அளித்தார். இந்த விவகாரங்கள் குறித்து டிடிவி தினகரன் கூறியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக இடம் பெற்றால் அந்த கூட்டணியில் அமமுக அங்கம் வகிக்குமா? என கேட்கிறீர்கள். அதெல்லாம் தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம். ஓபிஎஸ், எடப்பாடி, சசிகலா, நான் இணைந்து போட்டியிட வாய்ப்பு உள்ளதா? என கேட்கிறீர்கள்..இதெல்லாம் அனுமானத்தில் கேட்கப்படும் கேள்வி.
இதற்கு பதில் சொல்ல முடியாது. நானும் ஓபிஎஸ்-சும் சேர்ந்து வரும் காலங்களில் அரசியலில் பயணிப்போம். வரும் பாராளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல் திமுகவை எதிர்த்து மக்கள் வாக்களிக்கும் தேர்தல். அதில் உறுதியாக தமிழக மக்கள் திமுகவிற்கும் பழனிசாமிக்கும் மாற்றாக அமமுகவை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரே கையெழுத்தில் நீட்டை விலக்கிவிடுவோம் என்று சொன்னார்கள்.

இது உச்ச நீதிமன்ற தீர்ப்பு... நீதிமன்ற தீர்ப்பு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றும் விதமாக திமுக தேர்தல் வாக்குறுதியை கொடுத்தது. அன்றைய சூழலில் எந்த வாக்குறுதியும் கொடுக்காவிட்டாலும் கூட மக்கள் அவர்களுக்கு ஆட்சியை கொடுத்து இருப்பார்கள். திமுகவின் குணாதியசமே மக்களை ஏமாற்றுவதுதான். ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு எந்த வித தவறான நடவடிக்கையிலும் ஈடுபடுவார்கள்.
எப்போது எல்லாம் திமுக ஆட்ச்கிக்கு வருகிறதோ அப்போது எல்லாம் கர்நாடக அரசுக்கு தைரியம் வந்துவிடும். தமிழக மக்களை வஞ்சிக்க பார்ப்பார்கள். ஆனால், மத்திய அரசு உறுதியாக இருந்து தமிழ்நாட்டு மக்களின் உரிமையை பெற்று தர வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கையாகும். அதிமுக மாநாடு பற்றி கேட்கிறீர்கள்.. கடந்த 4,5 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த போது ஈட்டிய செல்வத்தைக் கொண்டு மக்களை அள்ளி செல்லலாம் என பார்க்கிறார்கள்.

20 லட்சம் பேர், 25 லட்சம் பேர் என்று சொல்வதை பார்க்கும் போது எப்படியும் 250 கோடிக்கு மேல் மக்களுக்கு பணத்தை வாரி வழங்க கூடிய நல்ல செயலில் ஈடுபட்டுள்ளார்கள். மக்கள் செல்வார்களா என்று தெரியாது. ஆனால் எல்லா பகுதிகளிலும் ஒவ்வொரு நபருக்கு ஆயிரம் ரூபாயும் மற்றவை எல்லாம் கொடுத்து கூப்பிடுகிறார்கள்.
அவர்கள் என்னதான் கூட்டத்தை கூட்டி சென்றாலும் தானாக கூடாத வரை வெற்றியை தராது. அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கபளீகரம் செய்து இருக்கிறார். அதை ஜனநாயக வழியில் மீட்டு எடுக்கபப்ட்ட இயக்கம் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். நாங்கள் வரும் காலத்தில் அம்மாவின் இயக்கத்தை ஜனநாயக ரீதியில் மீட்டு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications