அதிகரிக்கும் கொரோனா.. வாடகை கொடுக்க முடியாத நிலை.. சென்னையிலிருந்து வெளியேறும் மக்கள்
சென்னை: சென்னை கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மூட்டை முடிச்சுகளுடன் வீட்டை காலி செய்துவிட்டு வாகனங்களில் மக்கள் வெளியேறி வருகிறார்கள்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது.
இதில் சென்னையில் 30444 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 70 சதவீதம் தொற்று சென்னையில்தான் உள்ளது. ராயபுரம், திருவிக நகர், வளசரவாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாகவே உள்ளது.

தொற்று நோய்
இந்த நிலையில் தமிழகத்தில் நோயின் தொற்று அதிகமாக இருப்பதால் வரும் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் முன்பு கிடைத்த ஊதியம் கிடைப்பதில்லை என்றும் ஒரு சில தொழில்கள் இன்னும் திறக்கப்படாததால் வேலையில்லாமலும் ஊதியம் இல்லாமலும் மக்கள் வாடுகிறார்கள்.

முன்பணம்
இதனால் வாடகை கொடுக்க இயலாமலும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் நிலை அறிந்தும் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் குடியிருப்போரிடம் வாடகை கேட்பதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள். வேலையில்லாத நிலை உள்ளதை கூறினால் வீடு குடித்தனம் வந்த போது கொடுக்கப்பட்ட முன்பணத்தில் வாடகையை கழித்து கொள்கிறார்கள்.

சென்னை
அது கழித்தது போக மீதம் பணம் இருந்தால் ஒரு மாத வாடகை பணம் இருந்தால் தங்க வைக்கிறார்கள் என்றும் இல்லாவிட்டால் வீட்டை காலி செய்யுமாறு கூறுகிறார்கள் என்றும் மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். இதனால் சின்ன யானை வண்டிகளில் மூட்டை முடிச்சுகளை எடுத்து கொண்டு சென்னையை விட்டு வெளியேற தொடங்கிவிட்டார்கள்.

வந்தாரை வாழ வைக்கும் சென்னை
சொந்த ஊர் நோக்கி பயணம் செய்வதாகவும் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். வந்தாரை வாழ வைக்கும் சென்னை தற்போது கொரோனா பிரச்சினையால் அதன் குணாதிசயத்தை இழந்துவிட்டதாக மக்கள் கூறுகிறார்கள். ஊரில் பிழைப்புக்கு வழியில்லாமல் சென்னை வந்த நிலையில் அங்கும் பிழைப்பு இல்லாமல் சொந்த ஊர் திரும்பும் சோகம் அரங்கேறியுள்ளது.












Click it and Unblock the Notifications