144 எதிரொலி... சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்... இடம்பிடிக்க தள்ளுமுள்ளு
சென்னை: தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதால் சென்னை, கோவை, உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதனால் பேருந்துநிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதுடன், பேருந்துகளில் இடம்பிடிக்க தள்ளுமுள்ளு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
குறைந்த எண்ணிக்கையில் மட்டும் பேருந்துகள் இயங்குவதால் மக்கள் கூட்ட நெரிசலில் நெருக்கிப்பிடித்து பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
பதற்றம்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வருகிறது. இந்த தகவல் அறிந்தது முதல், பெரும்பாலானோர் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட வண்ணம் இருக்கின்றனர். காரணம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஒரு சில தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்றுவிடுவோம் என நினைத்து மக்கள் பேருந்து நிலையங்களில் குவியத் தொடங்கியுள்ளனர்.
தவிப்பு
ஆனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மிக குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுவதால் இடம்பிடிப்பதற்காக தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்படும் நிலை காணப்படுகிறது. ரயில்கள் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பேருந்துகளை விட்டால் வழியில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் தங்களின் சிரமம் அறிந்து கூடுதல் எண்ணிக்கையில் இன்றிரவு மட்டும் பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர் பொதுமக்கள்.
குழறுபடி
பொதுவாகவே இதுபோன்ற இடர்பாடுகள் மிகுந்த காலத்தில் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவது வழக்கமான ஒன்று தான். இதனை உளவுத்துறை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தவறியதா எனத் தெரியவில்லை. இருப்பினும் திடீரென 144 அறிவித்ததால் மக்கள் மத்தியில் ஒரு வித பதற்றம் பற்றிக்கொண்டது. இதனால் குழந்தைகளும், பெண்களும் பேருந்துநிலையங்களில் மிகுந்த பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
குறிக்கோள்
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகளின் குறிக்கோள் என்பது பொதுமக்கள் ஒன்றுகூடலை தவிர்க்க வேண்டும் என்பது தான். ஆனால் அந்த குறிக்கோளே கேள்விகுறியாக்கப்படும் வகையில் கூட்ட நெரிசலில் ஒருவர் மூச்சுக்காறை ஒருவர் சுவாசித்து பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இன்றிரவு மட்டுமாவது அதிக எண்ணிக்கையில் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.