4 மாசமாச்சு.. எழில் கொஞ்சும் கடற்கரையில் மணல், தண்ணீரில் விளையாடி மகிழ்ந்த மக்கள்.. ஹேப்பி அண்ணாச்சி
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் இன்று முதல் பொது மக்களுக்கு அனுமதி அளித்ததால் ஏராளமானோர் அங்கு கூடி ஆரவாரம் செய்தனர். 4 மாதங்களுக்கு பிறகு இவர்கள் கடல் அலையில் குதூகலமாக விளையாடினர்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் மக்கள் கூடும் பொழுதுபோக்கு அம்சங்கள் மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி தியேட்டர்கள், கடற்கரைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்பட்டிருந்தன.
கொரோனாவின் 2-ஆவது அலை சற்று குறைந்துள்ள நிலையில் கடற்கரைகளில் நடைப்பயிற்சிக்கு செல்ல மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எனினும் நடைப்பயிற்சிக்கு செல்வோர் கடற்கரையின் உள்ளே சென்று வந்த வண்ணம் இருந்தனர்.

தமிழக அரசு
இந்த நிலையில் இன்று முதல் கடற்கரைகளுக்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து மெரினா கடற்கரையில் இன்று மக்கள் காலையிலேயே திரண்டனர். கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கடற்கரை மணல் பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் காமராஜர் சாலையில் நின்றபடியே மணல் பகுதிக்கு எப்போது செல்வோம் என ஏக்கத்தில் இருந்தனர்.

தண்ணீரில் குதூகலம்
இந்த நிலையில் இன்று முதல் அனுமதி கிடைத்துள்ளதால் மெரினா கடற்கரைக்குள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலையில் உற்சாகமாக சென்று மணல் பரப்பில் குதூகலமாக விளையாடி வந்தனர். அது போல் தண்ணீரிலும் ஆட்டம் போட்டனர். இரண்டாவது மிக நீளமான கடற்கரையான இந்த மெரினா பல நினைவுகளை கொண்டுள்ளது.

காலையில் மக்கள் கூட்டம்
இன்று வெயில் இல்லாத நிலையில் காலையிலேயே மக்கள் கூட்டமாக வந்தனர். இனி எந்த தடையும் இன்றி பொதுமக்கள் தங்கள் பொழுதை கடற்கரைகளில் கழிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று பூங்காக்களிலும் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது போன்று சிறிய பூங்காக்கள் முதல் பெரிய பூங்காக்கள் வரை அனைத்து பூங்காக்களிலும் அனுமதி அளிக்கப்பட்டதால் காலையிலேயே மக்கள் மீண்டும் கூடி மகிழ்ந்தனர்.

குழந்தைகள் பூங்காக்கள்
நிறைய பேர் நடைபயிற்சி மேற்கொண்டனர். குழந்தைகள் பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர். 4 மாதங்கள் கழித்து கிடைத்த இந்த அனுமதியால் மக்கள் கடற்கரைகளில் உற்சாகமாக இருந்தனர். இருப்பினும் கொரோனாவின் 3ஆவது அலை தற்போது தொடக்க நிலையில் இருக்கும் போது இது போல் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவது நல்லதில்லை என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

காவலர்கள் வழங்கிய சானிடைசர்கள்
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வலியுறுத்தி கடற்கரை பகுதிகளில் போலீஸார் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டனர். மாஸ்க் அணியாமல் இருந்தவர்களுக்கு போலீஸார் முகக் கவசங்களை வழங்கினார். சில இடங்களில் சானிடைசர்களையும் பொதுமக்களுக்கு காவலர்கள் வழங்கினார்கள்.












Click it and Unblock the Notifications