சென்னையில் வாடகை வீட்டில் இருப்பவர்கள் வெள்ள நிவாரணம் பெறுவது எப்படி? வெளியான புதிய தகவல்
சென்னை: ரேஷன் அட்டை இல்லாமல் சென்னையில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் வெள்ள நிவாரண தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியதாலும், வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததாலும் மக்கள் தங்களது உடைமைகளை இழந்தனர். இதேபோல் பலர் கால்நடைகளை இழந்தும், இருப்பிடத்தை இழந்தும் தவித்தனர். இதன் காரணமாக மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, புயல், கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தொகையை வழங்க முதலில் மக்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதன்பின்னர் அவர்களுக்கு இந்த நிவாரணத்தொகை ரூ.6000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் சென்னையில் வசிப்பவர்களில் நிறைய பேர் வெளியூரை சேர்ந்தவர்கள் என்பதாலும், அதிகம் பேரிடம் ரேஷன் கார்டு இருக்க வாய்ப்பில்லை என்பதாலும் இந்த நிவாரண தொகை அவர்களுக்குஎப்படி கிடைக்கும் என்ற சந்தேகமும் எழுந்தது.
3 பிரிவுகளாக: இந்த நிலையில், தமிழக அரசு மழை வெள்ள நிவாரண தொகையை மூன்று பிரிவுகளாக வழங்க அரசு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வெள்ள நிவாரண தொகை ரேஷன் கார்டு அடிப்படையாக கொண்டுதான் வழங்கப்பட உள்ளது. வரும் 16 ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும். 20 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலமாக 6 ஆயிரம் ரொக்கமாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையை பொறுத்தவரை அனைவருக்கும் ரேஷன் கார்டு இருக்காது என்றே தெரிகிறது. சிலர் ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்து இருப்பார்கள். அவர்களுக்கு கடை கூட ஒதுக்கப்பட்டு இருக்கும் ஆனால், ரேஷன் கார்டு கிடைத்து இருக்காது. ஏனெனில் மகளிர் உரிமைத்தொகை பணிகளுக்காக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓரிரு வாரங்களில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்க உள்ளது.
மூன்று மாதம் வசித்த ஆதாரம்: அதற்கு முன்பாக நிவாரண தொகையை கொடுக்கும் பணியை அரசு தொடங்கிவிடும். எனவே, ஏற்கனவே ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், டோக்கன்கள் கொடுத்த பிறகு ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மெசேஜ் வந்து இருக்கும். அதை அடிப்படையாக கொண்டும் வாங்கிக்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. அதேபோல் வாடகை வீட்டில் இருப்பார்கள்.. ரேஷன் கார்டும் இருக்காது.. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கவும் இல்லை என்றால் வாடகை ஒப்பந்தம் இருக்கும்.
அல்லது கேஸ் பில் வைத்து இருப்பார்கள். இதை எல்லாம் அடிப்படையாக கொண்டு இந்த நிவாரணை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கும் கிடைக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது. சென்னையில் கடைசி மூன்று மாதங்களில் வசித்து வந்தார் என்ற ஆதாரம் இருந்தால் அவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் இது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications