இருக்கப்பட்டோர் துணி, நகைக்கடைகளில் .. இல்லாதபட்டோர் நகை அடகுக் கடைகளில்.. நேற்று நடந்தது இதுதான்!
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அடுத்து நேற்றைய தினம் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அனைத்து கடைகளிலும் நிற்க இடமில்லாமல் குவிந்த கூட்டத்தால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதே வேளையில் நேற்று முன் தினம் மதியம் முதல் நேற்றைய தினம் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்கவும் அனுமதி அளித்தது.
முழு ஊரடங்கில் எந்த கடைகளும் திறக்கப்படாது என அறிவித்தததால் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

மளிகைக் கடை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள மளிகைக் கடைகள், மருந்து கடைகள், காய்கறி கடைகள், பழக் கடைகள் உள்ளிட்ட கடைகளில் மக்கள் சமூக இடைவெளியின்றி குழுமி இருந்தனர். போலீஸாரும், கடைக்காரர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு கூறியும் அதை யாரும் சட்டை செய்யவில்லை.

மக்கள் கூட்டம்
பேக்கரிகளிலும் அதிக மக்கள் கூட்டம் கூடி ஒரு வாரத்திற்கு தேவையான பிஸ்கெட், கேக்குகள், பிரட், ரஸ்க் உள்ளிட்டவைகளை வாங்கிச் சென்றனர். ஆரணியை சுற்றியுள்ள சுற்று வட்டார பகுதி மக்களுக்கு ஆரணி நகரத்தில்தான் அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்பதால் சுற்றியுள்ள கிராமத்தினரும் நேற்றைய தினம் ஆரணியில் குவிந்தனர்.

தாடி மாஸ்க்
மாஸ்க்களை அணிந்திருந்தனர். ஆனால் அவற்றை தாடி மாஸ்க்காகவே போட்டிருந்தனர். போலீஸாரை கண்டதும் மூக்கின் மீது மாஸ்க்கை இழுத்து விட்டனர். ஆரணியில் பொதுவாக இது போன்று ஒரு கூட்டம் பொங்கல், தீபாவளி காலங்களில் மட்டுமே இருக்கும். ஆனால் நேற்றைய தினம் இயற்கைக்கு மாறாக இத்தனை மக்கள் குவிந்தது கேஸ்களை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

சாமான்
காய்கறி கடை, மளிகைக் கடை கூட பரவாயில்லை. துணிக்கடைகள், நகைக்கடைகளில் கூட மக்கள் பரவலாக கூடினர். அது போல் நகை அடகு வைக்கும் கடைகளிலும் மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்தது. நகை அடகு வைக்கும் கடைகள் இத்தனை நாட்களாக திறக்கப்படாததால் கையில் காசு இல்லாத மக்கள் நேற்றைய தினம் திறந்தவுடன் நகைகளை அடகு வைத்து செலவுக்கு பணம் வாங்கி பின்னர் மளிகை சாமான்கள், காய்கறிகளை வாங்கியதை காண முடிந்தது.












Click it and Unblock the Notifications