கூட்டணி ஆட்சி இல்லையா? மக்கள் தான் முடிவு செய்வார்கள்.. ஸ்டாலின் கருத்துக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
சென்னை: கூட்டணி ஆட்சி தமிழகத்திற்கு ஒத்து வராது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், மக்கள் ஆட்சியா அல்லது கூட்டணி ஆட்சியா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.. என்று தெரிவித்துள்ளார். மேலும் 2006-இல் மக்கள் தீர்ப்பை நாம் செயல்படுத்தாததும் நம் (காங்கிரசின்) தவறு.. என்றும் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் என கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன. இதில் திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டாலும், தொகுதி பங்கீடு செய்ய பேச்சுவார்த்தைக் குழு அமைக்காமல் திமுக காலம் தாழ்த்தி வருகிறது.

கூட்டணி ஆட்சி கிடையாது - ஸ்டாலின்
வரும் 22 ஆம் தேதி முதல் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என திமுக கூறியுள்ளது. இதனால் திமுக காங்கிரசில் சுமூகமான முடிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் ஒத்து வராது என்று கூறினார்.
ராகுல் காந்தி எனக்கு சகோதரர் போன்றவர், அவருக்கும் அப்படித்தான் என்று பேசினார். திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை. திமுக காங்கிரஸ் இணைந்தே இந்த தேர்தலை சந்திக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதனால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று பேசி வந்த காங்கிரசுக்கு இது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
செல்வப் பெருந்தகை கருத்து
காங்கிரசில் உள்ள தலைவர்கள் ஒருசில கூட்டணி ஆட்சி என சொல்லி வந்த நிலையில் இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலினின் பதில் இருந்தது. இது குறித்து கூறிய தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும்.
மாணிக்கம் தாகூர் பதிலடி
அந்த வகையில் ஸ்டாலினின் கருத்தினை அவரது கருத்தாக கருதுகிறேன். எங்கள் தலைமை ஆட்சியில் பங்கு குறித்து முடிவு எடுக்கும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், மக்கள் ஆட்சியா அல்லது கூட்டணி ஆட்சியா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்..
2006-இல் மக்கள் தீர்ப்பை நாம் செயல்படுத்தாததும் நம் (காங்கிரசின்) தவறு.. என்று கூறியுள்ளார். இதனால் மீண்டும் திமுக - காங்கிரஸ் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணிக்கம் தாகூர் 2006 சட்டமன்ற தேர்தலை குறிப்பிட்டு கூறியிருந்ததும் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2006 தேர்தல் முடிவு
2006 தமிழக சட்டசபை தேர்தலில், 96 இடங்களில் திமுக வெற்றி பெற்று இருந்தது. அப்போது காங்கிரஸ் 36 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்றபோது திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறவில்லை. இருந்தபோதிலும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவால் திமுக ஆட்சி அமைத்தது.
2006 தேர்தலில் காங்கிரசால் தான் திமுகவால் ஆட்சி அமைக்க முடிந்தது என்றும் அப்போது நாம் கூட்டணி ஆட்சி என்ற கருத்தை வலியுறுத்த தவறிவிட்டோம் என்ற கருத்தை சுட்டிக்காட்டியே மாணிக்கம் தாகூர் எம்பி இந்த கருத்தினை தெரிவித்து இருக்கிறார். இதனால் மீண்டும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் லேசான சலசலப்பு தொடர்ந்து வருவதாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications