அரசு மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறை.. மக்கள் நல்வாழ்வுத்துறை அதிரடி!
சென்னை: மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. அரசு மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை கடந்த ஆகஸ்ட் மாதமே வெளியிட்டு, அதன்படி நடைமுறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையில் மருத்துவர் பாலாஜி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை இளைஞர் ஒருவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்தம் கொட்ட சரிந்த மருத்துவர் பாலாஜி மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தலைநகர் சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மருத்துவ சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்று மருத்துவ சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர். எனவே மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் புறக் காவல் நிலையம் அமைக்கப்படும். அனைத்து அரசு மருத்துவமனையிலும் சிசிடி கேமரா பொருத்தும் பணி நடைபெறுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமராவை பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளன" என்றார்.
இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை முன்பு பிறப்பித்த அரசு மருத்துவமனைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி பணிகள் நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசு மருத்துவமனை, மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது பிணையில் விடக்கூடாத வகையிலான குற்றமாகும். மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவமனை பாதுகாப்புக்குழு, வன்முறை தடுப்புகுழு அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவச் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது மற்றும் மருத்துவமனையின் சொத்துக்களுக்குச் சேதம் அல்லது இழப்பினை ஏற்படுத்துவது, தமிழ்நாடு மருத்துவச் சேவையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் மருத்துவச் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வன்முறையையும் சொத்துக்குச் சேதத்தினை அல்லது இழப்பினை ஏற்படுத்துவதையும் தடுத்தல்) சட்டம், 2008 (தமிழ்நாடு சட்ட எண். 48/2008)-cir கீழ் மூன்று ஆண்டுகளுக்கு மேல், பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் மற்றும் இழப்பீடு விதிக்கத்தக்க, பிணையில் விடக் கூடாததுமான், தண்டனைக்குரியக் குற்றமாகும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆரம்ப சுகாதார நிலைய அளவில் மருத்துவமனை பாதுகாப்புக்குழு மற்றும் வன்முறை தடுப்பு குழு அமைக்கப்படும். மருத்துவமனை பாதுகாப்புக்குழு, அரசு மருத்துவமனை டீனை தலைவராக கொண்டதாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications