செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்து ஷாக்.. ED வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு தள்ளுபடி
சென்னை: செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை வரும் 22 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக கைது செய்தது. இந்த வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்து இறுதி தீர்ப்புக்காக தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் செந்தில்பாலாஜி புதிதாக 2 மனுக்களை தாக்கல் செய்தார். அதில், 'சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் வங்கி தொடர்பான அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. எனக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் கையால் எழுதி திருத்தப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ஆவணங்களை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி அதன் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும்.
வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய மனு மீது மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதிக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார். இந்த மனுக்கள் சென்னை அமர்வு முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், அமலாக்கத்துறையால் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் கையால் எழுதி திருத்தப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
அமலாக்கத்துறை வாதிடுகையில், 'இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல. ஆவணங்கள் அனைத்தும் வங்கியில் இருந்து தான் பெறப்பட்டது. விசாரணையை நீண்ட காலம் இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கிலே இதுபோன்ற மனுக்களை செந்தில் பாலாஜி தரப்பினர் தாக்கல் செய்து வருகின்றனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறியது.
அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை வரும் 22 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 48 -வது முறையாக வரும் 22 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications