இருமலுடன் தொடங்கும் கொரோனா காலர் ட்யூன் எரிச்சலுட்டுகிறது.. தடை செய்யக் கோரி ஹைகோர்டில் வழக்கு
சென்னை: இருமலுடன் தொடங்கும் கொரானா வைரஸ் விழிப்புணர்வு காலர் ட்யூனை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரானா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக மொபைல் அழைப்புகளின் போது, இருமலுடன் தொடங்கும் விழிப்புணர்வு விளம்பரத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் மத்திய சுகாதார துறை விளம்பரப்படுத்தி வருகிறது.
இந்த விழிப்புணர்வு விளம்பரத்தை தடை செய்யக்கோரி சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த வழக்கறிஞர் சிவ. ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், இதுபோன்ற விழிப்புணர்வு விளம்பரத்தால் ஆரோக்கியமான நபரும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது போன்ற மனநிலைக்கு தள்ளப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விளம்பரம் எரிச்சல் ஊட்டும் வகையிலும் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
குறுஞ்செய்தி, வாட்ஸ் அப், ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், திரையரங்குகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல வழிகள் இருக்கும்போது, இருமலுடன் தொடங்கும் ரிங்டோன் பயன்படுத்துவது மக்களின் அமைதியான வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையில் இருப்பதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications