பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்.. "பாஜகவினரின் மனதைரியத்தை குறைத்துவிட முடியாது" அண்ணாமலை ட்வீட்!
சென்னை: கோவை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி பாஜகவினரின் மனதைரியத்தை குறைத்துவிட முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவின் சனாதனம் தொடர்பான பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆ ராசாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்து வருகிறது.
அ.ராசா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடத்திய பாஜகவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் கோவையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு முகமையும் அமலாக்கத் துறையும் சோதனை நடத்தியபின், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போராட்டம் “ஓகே”.. தமிழகம் முழுவதுமா? இல்லை கோவையில் மட்டுமா? அண்ணாமலை அறிக்கையால் தாமரைகள் குழப்பம்
பெட்ரோல் குண்டுவீச்சு
இதனிடையே பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் கோவை சித்தாபுதூர் பகுதியில் நேற்று இரவு பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. இந்த பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை என்பதால், அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. இதனைக் கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகிறார்கள். மேலும் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இதற்கு பாஜக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அண்ணாமலை கண்டனம்
இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், கோயம்புத்தூர் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.
அண்ணாமலை ட்வீட்
இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை திமுக அரசு உணர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.