பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு இஸ்லாமிய அமைப்புகள்தான் காரணமாம்..பழிபோடும் பாஜக எச்.ராஜா
சென்னை: தமிழகத்தில் பாஜகவினர் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு இஸ்லாமிய அமைப்புகள்தான் காரணம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கோவை நகர் பகுதி மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய புறநகர் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. ஒரே நாளில் ஏழு சம்பவங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

கோவையில் தீவிர சோதனை
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் வாகன சோதனையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை , கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றது. துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையைத் தொடர்ந்து சென்னை, சத்தியமங்கலம், திண்டுக்கல்லிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

மர்மங்கள் நீடிப்பு
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. கடந்த காலங்களைப் போல எந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் நீதிமன்றங்களில் சரணடையவும் இல்லை. இதனால் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களின் பின்னணி தொடர்பான மர்மங்கள் நீடித்து வருகிறது.

பழிபோடும் எச்.ராஜா
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மீது பழியை போடும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகம் முழுவதும் இஸ்லாமிய பயங்கர வாதம் தலைவிரித்து ஆடுகிறது என குறிப்பிட்டுள்ளார் எச்.ராஜா. அவரது இந்த கருத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பதிவுகள் போடப்பட்டு வருகின்றன.

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா ரெய்டு
இந்துக்கள்- சூத்திரர்கள்- விபச்சாரி மகன் என திமுக மூத்த தலைவர் ஆ.ராசா பேசியதை பாஜகவினர் கண்டித்தனர். ஆ.ராசாவுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்த சூழ்நிலையில் கோவை, சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் இச்சோதனைகளில் இணைந்து கொண்டனர். அத்துடன் அந்த அமைப்பின் நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுவிப்பு
இந்நிலையில் பாஜகவினர் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, கோவை ஒப்பணக்கார வீதியில் மாருதி செலக்சன்ஸ் துணிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ஆகியவற்றில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சிலர் விசாரிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கும் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்ததால் போலீசார் அவர்களை விடுவித்தனர்.












Click it and Unblock the Notifications