சென்னை தபால் நிலையங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு... தி.வி.கவை சேர்ந்த 4 பேர் கைது

திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் 1.30 மணிக்குள்மயிலாப்பூர், மந்தைவெளி தபால் நிலையங்களுக்கு, இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் பெட்ரோல் குண்டுகள் சரமாரியாக வீசியுள்ளனர்.
பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் தபால் நிலையத்தில் ஏற்பட்ட லேசான தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
மயிலாப்பூர் தபால் நிலையத்தின் உள்ளே 5 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஜன்னல் கதவுகளை திறந்து பெட்ரோல் குண்டுகளை உள்ளே வீசியதில், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தானியங்கி முத்திரை ஒட்டும் எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.
மந்தைவெளி தபால் நிலையத்தில் 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஆனால், இங்கு அதிகளவு சேதம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரண்டு தபால் நிலையங்களில் இருந்தும் வெடிக்காத 4 பெட்ரோல் குண்டுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தை அடுத்து, மயிலாப்பூர், மந்தைவெளி ஆகியப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த தென்சென்னை மாவட்ட செயலர் உமாபதி உட்பட 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தாம் பங்கேற்கப் போவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்திருந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications