படுமோசம்.. 16 நாட்களில் 14வது முறையாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. இன்று புதிய உச்சம் தொட்டது!
சென்னை: நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து 14 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பொருளாதார மந்த நிலை, எரிபொருள் விலை ஏற்றம், அத்தியாவசிய பொருள் விலை ஏற்றம் காரணமாக மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் இது அரசியல் பிரச்சனையாக உருவெடுத்து மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
இலங்கை, பாகிஸ்தானில் மக்கள் போராட்டம் நடக்க இதுவே காரணம். பெரு நாட்டிலும் இதனால் மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இந்த நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது.

இந்தியா பெட்ரோல்
இந்த நிலையில்தான் இந்தியாவிலும் தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 16நாட்களுக்கு முன் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. இந்த 16 நாட்களில் 2 நாட்கள் தவிர மற்ற 14 நாட்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. தினமும் 30 - 80 பைசா வீதம் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்தியா பெட்ரோல் விலை
இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்தது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்தது. டீசல் லிட்டருக்கு ரூ.100.94க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 16 நாட்களில் இதுவரை பெட்ரோல் விலை 9.56 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

டீசல் விலை
டீசல் விலை 9.86 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் விற்கும் மெட்ரோ நகரங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளது. மும்பையில் பெட்ரோல் விலை 120 ரூபாயை நெருங்குகிறது. அங்கு பெட்ரோல் விலை 84 பைசாவும், டீசல் விலை 85 பைசாவும் உயர்த்தப்பட்டது. மும்பையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 120.51 க்கு விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 104.77 க்கு விற்கப்படுகிறது.

என்ன நிலவரம்
டெல்லியில் இன்று பெட்ரோல் விலை 80 பைசாவும், டீசல் விலை 80 பைசாவும் உயர்த்தப்பட்டது. டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 105.41 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 96.67 க்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் விலைவாசியும் உயர தொடங்கி உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் பட்சத்திலும் இந்தியாவில் எரிபொருள் விலை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications