டிரம்ப் மீது உலக நாயகனுக்கு வந்ததே கோபம்.. "இது தேவையில்லாத வேலை.." ஆவேசமாக அறிக்கை விட்ட கமல்!
சென்னை: ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை வாங்க இந்தியாவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளதாக டிரம்பின் ஆலோசகர் கூறிய கருத்துகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியாவில் பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் சூழலில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் இதில் நேரடியாக டிரம்ப்பை சாடியுள்ளார். இது தொடர்பான அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இஸ்ரேல்- ஈரான் இடையேயான மோதல் 9வது நாளாகத் தொடர்கிறது. இந்த மோதலில் இஸ்ரேல் உடன் அமெரிக்கா நிற்கிறது. இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தவே, மத்திய கிழக்கு பிராந்தியம் முழுக்க போர் பதற்றம் உருவாகியுள்ளது.

அமெரிக்கா அனுமதி
இந்த மத்திய கிழக்கு மோதலால் சர்வதேச விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா 'அனுமதி' அளித்ததாக அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறியிருந்தார். அமெரிக்காவின் இந்த கருத்து கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு பெர்மிஷன் கொடுக்க அமெரிக்கா யார் என்ற கேள்விகளை இங்குள்ள அரசியல் கட்சிகள் கேட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே நடிகர்-அரசியல்வாதியான கமல் ஹாசன் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா எந்த ஒரு நாட்டின் உத்தரவுக்கும் கட்டுப்படாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.
கமல் கடும் கோபம்
அதில் கமல், "டியர் பிரெசிடென்ட், இந்தியாவின் மக்கள் ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட தேசத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் தொலைதூர வெளிநாடுகளின் உத்தரவுகளுக்கு இனி கட்டுப்படுவதில்லை. தயவுசெய்து உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையே பரஸ்பர மரியாதை தான் நீடித்த உலக அமைதியின் ஒரே அடிப்படை. உங்கள் நாட்டிற்கும் மக்களுக்கும் அமைதியையும் செழிப்பையும் விரும்புகிறோம்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார். கமலின் இந்த ட்வீட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
என்ன மேட்டர்
முன்னதாக டிரம்ப்பின் ஆலோசகரும், அமெரிக்கக் கருவூல துறை அமைச்சருமான ஸ்காட் பெசென்ட் தான் ரஷ்ய எண்ணெய்யை வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி கூறி சர்ச்சை கிளப்பியிருந்தார். ஃபாக்ஸ் பிசினஸ் உடனான ஒரு நேர்காணலில் அவர், "இந்தியர்கள் மிகவும் நேர்மையாகச் செயல்பட்டார்கள். தடை செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதை நிறுத்தும்படி நாங்கள் அவர்களிடம் கேட்டோம். அவர்களும் அப்படியே செய்தார்கள். அவர்கள் அதற்குப் பதிலாக அமெரிக்க எண்ணெய்யை வாங்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இப்போது எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டுவிட்டன. சர்வதேச அளவில் தற்காலிக எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அதைச் சமாளிக்க ரஷ்ய எண்ணெய்யை வாங்க அவர்களுக்கு நாங்கள் அனுமதி அளித்தோம்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் சொன்ன பதில்
பெசென்ட்டின் இந்த கருத்துகள் குறித்து டிரம்ப்பிடமும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த டிரம்ப், அழுத்தத்தைக் குறைக்கவே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தற்போதைய சூழலில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை எதுவும் இல்லை எனத் தெரிவித்த அவர் நிறைய எண்ணெய் உள்ளதாகவும் பிரச்சினைகள் எல்லாம் மிக விரைவில் சரியாகும் என்றும் கூறியிருந்தார்.
முன்னதாக பெசென்டின் கருத்துக்குக் காங்கிரஸின் ராகுல் காந்தியும் மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர், "இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நமது மக்களின் ஒட்டுமொத்த விருப்பத்தின் வெளிப்பாடே ஆகும். அது நமது வரலாறு மற்றும் கொள்கையில் வேரூன்றியிருக்க வேண்டும். நாம் இன்று காண்பது கொள்கை அல்ல" என்று சாடியிருந்தார்.












Click it and Unblock the Notifications