எல்லா பக்கமும் நெருக்கும் தலைகள்.. அடுத்தடுத்த சரிவு.. மோடி - அமித் ஷா இணைக்கு "அடி".. பின்னணி
சென்னை: சட்டசபை தேர்தல் தோல்விகள் மற்றும் கொரோனாவிற்கு எதிரான பின்னடைவு என்று பல்வேறு காரணங்களால் மொத்தமாக பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வீழ்த்தவே முடியாதவர்கள்.. எந்த விதமான அரசியல் பிரச்சனையையும் எளிதாக்க எதிர்கொள்ள கூடியவர்கள் என்று பெயர் பெற்ற ஜோடிதான் மோடி - அமித் ஷா இணை. எந்த மாநிலத்தில், எப்படி ஒரு பிரச்சனை வந்தாலும், அதை சாதுர்யமாக எதிர்கொண்டு கடந்த 6 வருடமாக இவர்கள் இருவரும் சிறப்பாக சமாளித்து வந்தனர்.
இந்தியா முழுக்க பல மாநிலங்களில் பாஜகவின் கொடி உயர பறந்ததற்கும், ஆசியாவிலேயே பணக்கார கட்சிகளில் ஒன்றாக பாஜக வலம் வருவதற்கும் அக்கட்சியின் சரியான திட்டமிடல், அதை செயல்படுத்தும் விதம் ஆகியவை தான் காரணம். ஆனால் அதே பாஜக தற்போது இரண்டு முக்கியமான விஷயங்களில் சரிவை சந்தித்துள்ளது.
கண்ணீர் விட்டு அழுத மயில்சாமி.. தூக்கி அடித்த விருகம்பாக்கம்.. இவருக்கே இந்த நிலைமையா..?
கொரோனா
இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் ஒரு பக்கம் கடுமையாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது. டெல்லி தொடங்கி ஒவ்வொரு மாநிலங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தினசரி கேஸ்கள் 4 லட்சத்தை தாண்டிவிட்டது.
கட்டுப்பாடு
எதை தின்றால் பித்தம் தெளியும் என்று மத்திய அரசு குழம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் எல்லாம் தினமும் பக்கம் பக்கமாக கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் தோல்வியை பட்டியலிட்டு எழுதி வருகிறது. கொரோனாவிற்காக ஏற்படும் மரணங்களை விட ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள்தான் இந்தியாவில் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.
மோடி
கிட்டத்தட்ட கொரோனா இரண்டாம் அலையிடம் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதோ என்று கருதும் அளவிற்கு நாளுக்கு நாள் வரும் செய்திகள் அச்சமூட்டி வருகின்றன. ஒரு பக்கம் நிலைமை இப்படி இருக்க 5 மாநில சட்டசபை தேர்தலும் பாஜகவிற்கு இடியாக வந்துள்ளது. இதில் அசாம், புதுவையில் பாஜக வென்றாலும், அதை பெரிய விஷயமாக கருத முடியாது. பாஜக அதிகம் எதிர்பார்த்த தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் அக்கட்சி மோசமாக தோல்வி அடைந்துள்ளது.
தோல்வி
அதிலும் மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வெறும் 76 தொகுதிகள் மட்டுமே பெற்று பாஜக தோல்வி அடைந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸோ 214 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. இன்னொரு பக்கம் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி மோசமாக தோல்வி அடைந்துள்ளது. 159 இடங்களில் வென்று திமுக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது.
கேரளா
இதெல்லாம் போக கேரளாவில் இருக்கிற ஒரு எம்எல்ஏவையும் இழந்து மொத்தமாக ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் பெரிய வீழ்ச்சியை பாஜக பெற்றுள்ளது. இதன் மூலம் அமித் ஷா - மோடி இணை ஒருபக்கம் சர்வதேச மீடியா அழுத்தம், கொரோனா பாதிப்பு, தேர்தல் தோல்வி என்று மும்முனை பிரச்சனைகளை எதிர்கொண்டு உள்ளனர். எல்லா பக்கமும் தொடர் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு இந்த பாஜக இணை தள்ளப்பட்டுள்ளது.
சிக்கல்
பாஜகவிலும், ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் கூட லேசாக இவர்களுக்கு எதிராக எதிர்ப்புகள் வர தொடங்கி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதிலும் மேற்கு வங்க தேர்தல் தோல்வியால் அமித் ஷாவிற்கு கொஞ்சம் கட்சிக்கு உள்ளேயே அழுத்தங்கள் வருவதாக கூறப்பட்டுகிறது. முக்கியமாக தேசிய அளவில் பல தலைவர்கள் அப்செட் என்றும் தகவல்கள் வருகின்றன.
கேள்வி
மேற்கு வங்க தோல்வி பாஜகவை பெரிய அளவில் யோசிக்க வைத்துள்ளது. ராஜ்நாத் சிங் உள்ளிட்ட சில தலைவர்கள் கொஞ்சம் கேள்வி கேட்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் தேர்தல் தோல்வி, இன்னொரு பக்கம் கொரோனா பிரச்சனை, இதெல்லாம் போக சர்வதேச அழுத்தம் என்று பிரச்சனைகள் வரிசைகட்டி வருகின்றன.
பாஜக வட்டாரம்
ஆனால் பாஜக வட்டாரத்திலோ, இதை கண்டிப்பாக தேசிய தலைமை சமாளிக்கும் என்கிறார்கள். இது சின்ன சரிவுதான். கண்டிப்பாக பாஜக விரைவில் மீண்டு வரும், அமித் ஷா - மோடி இணை பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. அதேபோல் இதையும் கண்டிப்பாக் இவர்கள் எதிர்கொள்வார்கள்.