"ஆபரேஷன் தமிழ்நாடு".. பக்கா பிளானோடு இறங்கிய பாஜக.. முதலில் மோடி.. அடுத்து அமித் ஷா! ரிப்போர்ட் ரெடி
சென்னை: தமிழ்நாட்டிற்கு நாளை பிரதமர் மோடியும், நாளை மறுநாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வருகை புரிய உள்ளனர். இந்த பயணத்தில் அவர்களிடம் முக்கியமான ரிப்போர்ட் ஒன்று அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக வலுவாக இல்லாத மாநிலங்களில் அக்கட்சியை பலப்படுத்துவதற்கான பணிகளை பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை காவி கொடியை நடுவதே பாஜகவின் அரசியல் திட்டம்.
பாஜக வலிமையின்றி இருக்கும் தெலுங்கானா, மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் பாஜக இதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில்தான் தமிழ்நாட்டிலும் வலிமை அடைவதற்கான ஆபரேஷனை அந்த கட்சி கையில் எடுத்து உள்ளது.
முக்கியமாக 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக இடங்களை வெல்வதற்கான வியூகங்களை பாஜக வகுத்து வருகிறது.

பாஜக
பாஜகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 15 இடங்களிலாவது பாஜக வெற்றிபெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்று, அதிக இடங்களை வாங்கி, அதில் 15 இடங்களில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. இதை கருத்தில் கொண்டே கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டிற்கு மத்திய பாஜக அமைச்சர்கள் படையெடுத்து வருகிறார்கள். அதன்படி அடுத்த 30 நாட்களில் 76 மத்திய அமைச்சர்கள் தமிழ்நாடு வர உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

மத்திய அமைச்சர்
ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு சில மத்திய அமைச்சர்கள் வந்துவிட்டனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா , மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள், அணு ஆற்றல் மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் என்று வரிசையாக பல்வேறு அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு அடுத்தடுத்து வருகை புரிந்து வருகின்றனர். தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகத்தில் வழங்கப்படும் ரேசன் அரிசி தரம் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

பிரதமர் மோடி
இந்த நிலையில்தான் தற்போது பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழ்நாடு வர உள்ளனர். திண்டுக்கல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா நாளை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். அதற்கு மறுநாளே உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருகிறார். இதில் அமித் ஷாவிடம் பாஜக நிர்வாகிகள் சார்பாக முக்கியமான இரண்டு அறிக்கைகள் சமர்பிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மனநிலை என்ன?
அதன்படி தமிழ்நாட்டிற்கு வந்த மத்திய அமைச்சர்கள் மக்களை சந்தித்து பேசி உள்ளனர். இதுவரை வந்த அமைச்சர்கள் தமிழ்நாட்டில் மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது, அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது, மக்கள் வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன, மக்களின் தேவைகள் என்னென்ன, என்ன மாதிரியான வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எடுபடும் என்பது தொடர்பாக ரிப்போர்ட் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த ரிப்போர்ட் நாளை மறுநாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிக்கை
தமிழ்நாடு அரசியல் நிலவரம் பற்றி இந்த அறிக்கையில் இடம்பெற்று இருக்கும் அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் கோயம்புத்தூர் கார் வெடிப்பு தொடர்பாக ரிப்போர்ட் ஒன்றையும் பாஜக நிர்வாகிகள் அமித் ஷாவிடம் அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அமித் ஷாவிடம் இந்த அறிக்கையை முன்பே தாக்கல் செய்ய தமிழக பாஜக திட்டமிட்டு இருந்தது. ஆனால் அப்போது அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் நாளை மறுநாள் இந்த ரிப்போர்ட்டை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications