கூட்டணிக்கு வந்தால் பாருங்க.. இல்லைனா விட்டுடுங்க.. தேமுதிக மீது கடுப்பில் மோடி!
Recommended Video
சென்னை: தேமுதிக கட்சி மீது பிரதமர் மோடி கோபத்தில் இருப்பதாக செய்திகள் வருகிறது. தேமுதிக தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரச்சனை செய்து வருவதால் பிரதமர் மோடி கோபத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையுமா? ஏன் இத்தனை இழுபறி? ஏன் இத்தனை பேச்சுவார்த்தை என்பதுதான் தற்போது தமிழக அரசியலில் பெரிய கேள்வியாக உள்ளது. ஆனால் இந்த கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. தேமுதிகவிடமும் பதில் இல்லை.
நேற்று சென்னையில் பாஜக - அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தேமுதிக கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் தேமுதிக இதில் கலந்து கொள்ளாது என்று முடிவானது.
இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. சுதாரித்தால் நல்லது!
மோடியின் குட்புக்
பொதுவாக தமிழகத்தில் பாஜகவை சேராத இரண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மோடியின் குட்புக்கில் இருக்கிறார்கள் என்றால் அதில் ஒருவர் பாமக நிறுவனர் ராமதாஸ். இன்னொரு அரசியல் தலைவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். மக்கள் நலக்கூட்டணி தொடங்கி ஆரம்பத்தில் இருந்தே பாஜக இவர்கள் இருவர் மீது நல்ல மதிப்பு வைத்து உள்ளது.
ஆனால் கோபம்
ஆனால் தற்போது மோடிக்கும், பாஜகவிற்கும் தேமுதிக மீது சிறிய கோபம் இருப்பதாக கூறுகிறார்கள். தேமுதிக தொடர்ந்து கூட்டணி உருவாகாமல் காலம் தாழ்த்தி வருவதால் மோடி இப்படி கோபத்திற்கு உள்ளாகி இருக்கிறார். நேற்று சென்னை வந்த போது பிரதமர் மோடியும் கூட்டணி தலைவர்களிடம் இதை குறிப்பிட்டு விசாரித்து இருக்கிறார். தேமுதிக ஏன் கூட்டணிக்கு வரவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
விசாரித்தார்
பாஜக தமிழக பொறுப்பாளர் அமைச்சர் பியூஷ் கோயல் இதுகுறித்து மோடியிடம் விளக்கி இருக்கிறார். இரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும் காத்திருங்கள் என்று மோடியிடம் பியூஷ் கோயல் கூறி உள்ளார். முதல்வர் பழனிச்சாமியும், கண்டிப்பாக தேமுதிக கூட்டணிக்கு வரும். நாங்களே பேசி வரவைப்போம் என்றும் கூறி இருக்கிறார்.
மோடி கேள்வி
இந்த நிலையில் மோடி தேமுதிகவை கூட்டணியில் கொண்டு வர என்ன வேண்டுமென்றாலும் செய்யுங்கள். முடிந்த அளவு சீட் அதிகம் கேட்டால் கூட கொடுங்கள். ஆனால் கூட்டணி குறித்து 9ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் விட்டுவிடுங்கள் என்று கூறியதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.
மீண்டும் அறிவிப்பு
இதனால் அதிமுக மீண்டும் தனது பேச்சுவார்த்தையை தேமுதிகவுடன் தொடங்கி இருக்கிறது. பெரும்பாலும் நாளை அல்லது நாளை மறுநாள் இந்த கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். அதன்பின் தேமுதிக தலைவர்கள் டெல்லியில் மோடியை சந்திக்க வாய்ப்புள்ளது, சமாதானம் பேச வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள் .