விடாது உருக்கம்- தேமுதிகவை அப்படியே "ஆட்டைய போட" போகிறதா பாஜக? 'கவுரவமான' முடிவை எடுப்பாரா பிரேமலதா?
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இடைவிடாமல் உருக்கம் தெரிவித்து இரங்கல் தெரிவித்து வருவது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை இயல்பாகவே எழுப்ப தொடங்கி இருக்கிறது. தேமுதிக விரைவில் பாஜகவுடன் இணைந்துவிடுமா? என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
நடிகராக இருந்த விஜயகாந்த், 2005-ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். தமிழ்நாட்டு அரசியலில் தேமுதிக கிடுகிடுவென தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டு பிரதான அரசியல் கட்சியான திமுகவை விட கூடுதல் இடங்களைப் பெற்று சட்டசபை எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்று அசத்தியது. ஆனால் இத்தனை வளர்ச்சியும் திடுதிப்பென காணாமலே போனது.

வியூகங்கள் பிழை: தேர்தல் அரசியலுக்கு சித்தாந்தங்கள் தேவை இல்லைதான். ஆனால் வியூகங்கள் மிக முக்கியமானது. கூட்டணி அரசியலில் நுழைந்துவிட்ட பின்னர் விஷப் பரீட்சைகளுக்கு முக்கியத்துவம் தராமல் அறுவடையைத்தான் கவனிக்க வேண்டும் என்பதைத்தான் காங்கிரஸ், இடதுசாரிகள் தமிழ்நாட்டில் செய்து வருகின்றன. அப்படித்தான் விஜயகாந்தும் செய்திருக்க வேண்டும். அதிமுகவுடனான கூட்டணியை முறித்த நிலையில் திமுக பக்கம் போயிருந்தால் தேமுதிக என்ற கட்சி ஓரளவேனும் தாக்கு பிடித்திருக்க முடியும்.
பரிதாப தேமுதிக: ஆனால் விஜயகாந்த் மனைவி பிரேமலதா எனும் அரசியல் கத்துக்குட்டி கொடுத்த ஐடியாவால் 2016 தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து முதல்வர் வேட்பாளராகவும் விஜயகாந்த் முன்னிறுத்தப்பட்டார். அன்றோடு தேமுதிகவின் தலையில் மண் அள்ளிப் போடப்பட்டு எழுந்திருக்கவே முடியாத நிலைமைக்கு போய்விட்டது. தேமுதிகவுக்கு இப்போது வாக்கு சதவீதம் 0.5%-க்கும் குறைவு என்கிற பரிதாபம். எந்த பிரதான கட்சியும் சீந்துவாரற்ற நிலைக்குப் போய்விட்டது தேமுதிக.
விஜயகாந்த் மறைவு: இந்த நிலையில் விஜயகாந்த் காலமானார். விஜயகாந்த் மறைவு தமிழ்நாட்டு மக்களிடம் மிகப் பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தியது. விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு மூலை முடுக்குகளில் இருந்து எல்லாம் தலைநகர் சென்னை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். ஆனால் ஒட்டுமொத்த அனுதாபத்தையும் விஜயகாந்த் சமாதியில் நின்று 5 நிமிடம் பேசிய பிரேமலதா ஆழக் குழி தோண்டி புதைத்துவிட்டுதான் மறுவேலையே பார்த்தார். விஜயகாந்த் சமாதியில் நின்று கொண்டு பிரேமலதா பேசிய பேச்சை எவருமே ரசிக்கவில்லை.
மோடியின் திடீர் புகழஞ்சலி: இது ஒரு புறம் இருக்க, தேமுதிகவின் எதிர்காலம் என்னவாகும் என்கிற விவாதங்களும் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது திடீரென தேமுதிக மீது பாஜக அதீதமான கரிசனையையும் அனுதாபத்தையும் வெளிப்படுத்துவது ஏன் என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. திருச்சியில் ரூ20,000 கோடி அரசு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து புகழஞ்சலி செலுத்தினார். அது கூட ஓகே. இப்போது, தமது எக்ஸ் பக்கத்தில் விஜயகாந்துக்கு பக்கம் பக்கமாக புகழஞ்சலி செலுத்தி பதிவுகளை வெளியிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.
பாஜகவில் இணையும் தேமுதிக?: பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் இந்த அனுதாபம், தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கத்தான் என்று மட்டும் கடந்து போய்விட முடியுமா?. இருக்காது. தேமுதிகவுக்கு இருக்கிற சொற்ப வாக்கு வங்கியையும் கூட விட்டு வைக்காமல் கூண்டோடு அப்படியே தேமுதிகவையே பாஜகவுடன் இணைத்துக் கொள்கிற ஒரு வியூகமாகத்தன் இதை பார்க்க முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 2.5% வாக்கு வங்கி இருக்கிறது. இதில் தேமுதிகவின் .5% வாக்கு வங்கி சேருவது என்பது ஒருவகையில் பாஜகவுக்கு ஆதாயம்தான். இதற்கு பிரதிபலனாக 'ஏதோ' ஒன்றை பிரேமலதா குடும்பத்துக்கு கொடுத்துவிட்டால் போதும் என்பதும் பாஜக கணக்காக இருக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆக, ஒட்டுமொத்தமாக தேமுதிக என்கிற கட்சியையே அப்படியே 'ஆட்டைய போடுகிற' அஸ்திரத்தையே பிரதமர் மோடி முதல் அத்தனை பாஜக தலைகளும் சரமாரியாக ஏவிக் கொண்டிருக்கின்றன என்பது பட்டவர்த்தமான உண்மை; தேமுதிகவை இனியும் ஒப்புக்கு சப்பாணியாக நடத்திக் கொண்டிருக்காமல் பாஜகவுடன் இணைத்துவிடலாம் என்கிற முடிவை பிரேமலதா எடுத்தால் கூட குறைந்தபட்ச 'கவுரவமானதாகவும்' இருக்கும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications