முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தற்போது மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் இன்னமும் அதிவேகமாக பரவி வருகிறது.
எனினும் கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 56 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

பிரதமர் மோடி ஆலோசனை
அந்த வகையில் பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணிக்கு தமிழகம், டெல்லி, பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஒவ்வொரு மாநில முதல்வர்களும் விரிவாக பதில்அளிப்பார்கள் என்று தெரிகிறது.

தமிழகத்தில் கொரோனா
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசு இன்னும் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்த வாய்ப்பு உள்ளது. அதேபோன்று தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் நிவாரண உதவிகள் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைக்க உள்ளார்.

மோடி கருத்து கேட்பார்
இதனிடையே , நாடு முழுவதும் பள்ளிகளை கடந்த 21ம் தேதி முதல் படிப்படியாக திறக்கும்படி மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.. ஆனாலும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதுகுறித்தும் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களிடம் கருத்துகளை கேட்க வாய்ப்பு உள்ளது.

விஜயபாஸ்கரும் பங்கேற்கிறார்
பிரதமர் மோடியுடன் காணொலி காட்சி ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன்,தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.












Click it and Unblock the Notifications