மீண்டும் கிளம்புதே.. ராமநாதபுரத்தில் மோடி போட்டி- அடுத்த வாரம் ராமேஸ்வரம், தூத்துக்குடிக்கு விசிட்?
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடக் கூடும் என்ற தகவல் மீண்டும் ரெக்கை கட்டி பறக்க தொடங்கி உள்ளது. இம்மாத இறுதியில் ராமேஸ்வரம், தூத்துக்குடி குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிடக் கூடும் என சில மாதங்களுக்கு முன் பரவிய தகவல் பெரும் விவாதங்களை கிளப்பியது. மத்திய அமைச்சர்கள் தற்போதும் தொடர்ந்து ராமேஸ்வரத்துக்கு வந்து செல்கின்றனர். அண்மையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராமேஸ்வரத்தில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை உடனே விடுதலை செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

இன்னொரு பக்கம், ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் தாம் போட்டியிடுவேன் அல்லது திமுக வேட்பாளரை களமிறக்கினால் திமுக வேட்பாளரை ஆதரிப்பேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார். அண்மையில் இந்த விவகாரம் சற்று ஓய்ந்திருந்தது.
இந்த நிலையில் ராமேஸ்வரம் புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதள கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறாராம். இதற்காக இம்மாத இறுதியில் அல்லது அடுத்த வாரம் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தருவார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தரும் தேதி இன்னமும் உறுதியாகவில்லை எனவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications