ரஜினியின் 'குட்பை' முடிவால் கூட்டணி விவகாரத்தில் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட பாமக, தேமுதிக
சென்னை: அரசியலுக்கு தாம்வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருப்பதால் பாஜகவைவிட பாமகவும் தேமுதிகவும்தான் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றன.
சட்டசபை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக இடம்பெறும் என கூறப்பட்டது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை 2 அமைச்சர்கள் நேரில் சந்தித்தும் பேசினர்.
ஆனால் சென்னையில் நடைபெற்ற அதிமுக பிரசார கூட்டத்தில் பாஜக, பாமக, தேமுதிக பங்கேற்கவில்லை. பாமக தரப்பில் வடதமிழகம், மேற்கு மாவட்டங்களில் 28 தொகுதிகளும் தென்மாவட்டங்களில் 5 தொகுதிகளும் ஒதுக்க வேண்டும் என கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
திருமண உதவித் திட்டங்கள், பயிர்க் கடன்கள், மின்கட்டண சலுகை... அதிமுக அரசில் சாதனைகளும் உண்டு!
அதிமுகவுக்கு கிடுக்குப்பிடி நிபந்தனைகள்
அதேபோல் தேமுதிகவும் 41 தொகுதிகளை ஒதுக்கினால்தான் கூட்டணி என வெளிப்படையாகவே நிபந்தனை விதித்தது. இதேபோல் அதிமுகவிடம் 60-ல் தொடங்கி 40 தொகுதிகள்; அல்லது பாமக,பாஜக, தேமுதிக, புதிய தமிழகத்துக்கு மொத்தமாக 100 தொகுதிகள் என ஒதுக்க பாஜக வலியுறுத்தி வந்தன.
ரஜினி அரசியல்
இத்தனையும் நடிகர் ரஜினிகாந்த் தேர்தல் அரசியலுக்கு வருவதாக சொன்ன காலங்களில் நடந்தது. ரஜினிகாந்தை காரணம் காட்டி இத்தனை பேரங்களும் நடந்தன. கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டால் அதிமுகவை தனிமைப்படுத்திவிட்டு ரஜினியுடன் பாமக, பாஜக, தேமுதிக கை கோர்க்கவும் தயாராகவே இருந்தன. அல்லது திமுக அணிக்கு கூட செல்லவும் தயாராக இருந்தன. இதேபோல் திமுக கூட்டணியிலும் கூட சில கட்சிகள் ரஜினி பக்கம் போகலாம் எனவும் கூறப்பட்டது.
குட்பை சொன்ன ரஜினி
ஆனால் தாம் அரசியல் கட்சியையும் தொடங்கவில்லை; அரசியலுக்கும் வரவில்லை என ரஜினிகாந்த் அதிரடியாக அறிவிக்க களநிலவரம் அடியோடு மாறிவிட்டது. திமுக, அதிமுக கூட்டணிகளில் இருக்கும் கட்சிகள், இருக்கிற இடத்தை தக்க வைத்துக் கொண்டால் போதும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
நெருக்கடியில் பாமக, தேமுதிக
குறிப்பாக அதிமுகவிடம் அடம் பிடித்து வந்த பாஜக, பாமக, தேமுதிக மூன்றும் இப்போது கப்சிப் என அமைதி காத்தாக வேண்டிய நிலைதான். பாஜகவுக்கு அதிமுகவை விட்டால் வேற வழியே இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் போகமாட்டோம் என்கிற நிலையில்தான் கட்சிகள் உள்ளன. இதனால் பாமக, தேமுதிகவுக்கு இருக்கிற ஒரே வாய்ப்பு அதிமுகதான். அதனால் அதிமுக கூட்டணியில் எவ்வளவு இடம் கிடைக்கிறதோ அதை வாங்கிக் கொண்டு தேர்தலை சந்தித்தாக வேண்டிய கட்டாயத்தில் பாமக, தேமுதிக உள்ளன.