ஃபுல் ஃபோர்ஸ இறக்குங்க.. வியூகத்தை மாற்றிய பாமக.. இதுக்குத்தான் 'அந்த' வேட்பாளர் மாற்றமா?
சென்னை: கீழ்வேளூர் (தனி) தொகுதி வேட்பாளரை திடீரென்று மாற்றியுள்ளது பாமக. அங்கு வடிவேல் ராவணனை புதிய வேட்பாளராக களமிறக்கியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடத்தப்படும் நிலையில், மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அனைத்துக் கட்சிகளும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில், அவ்வப்போது ஆங்காங்கே வேட்பாளர்கள் மாற்றப்படுவதும், தொகுதிகள் மாற்றப்படுவதையும் நாம் காண முடிகிறது. அந்த வகையில் கீழ்வேளூர் தனி தொகுதியில் இரண்டாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வடிவேல் ராவணன்
நாகை மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் தனி தொகுதியில், சமீபத்தில் தான் ஒரு முக்கிய மாற்றம் அரங்கேறியது. அங்கு அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு தான் இடம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மார்ச்.16 அன்று, தாங்கள் போட்டியிடவிருந்த தஞ்சை தொகுதியை தேமுதிகவுக்கு கொடுத்துவிட்டு, கீழ்வேளூர் தொகுதியில் அமமுக போட்டியிடும் என்றும் டிடிவி அறிவித்தார். இப்போது மற்றொரு மாற்றமாக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக தனது வேட்பாளரை மாற்றியுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேத. முகுந்தனுக்கு பதிலாக பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது.

சிட்டிங் எம்.எல்.ஏ
கீழ்வேளூர் தொகுதியைப் பொறுத்தவரை கிறிஸ்துவர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான வேளாங்கண்ணி, இந்துக்களின் வழிபாட்டு தலமான எட்டுக்குடி, கலைஞர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை உள்ளிட்ட முக்கிய ஊர்கள் இத்தொகுதிக்குள் உள்ளன. இங்கு சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருப்பது திமுகவின் மதிவாணன். தவிர, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இங்கு செல்வாக்குடன் உள்ளன. பெரும்பாலும் ஜாதி வாக்குகள் இங்கு எடுபடாது.

அதிருப்தி
திருவாரூர், நாகை இடையே அமைந்துள்ள இந்த கீழ்வேளூர் பகுதி, கஜா புயலின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது. பலர் இங்கு வீடுகளை இழந்தனர். அப்போது, தமிழக அரசு வழங்கிய நிவாரண நிதி போதுமானதாக இல்லை என்று கோரி இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்தி கேட்டனர். கஜா புயல் காரணமாக, ஆளும் அரசு மீது இத்தொகுதி மக்கள் இப்போது வரை கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

திடீர் அறிவிப்பு
கீழ்வேளூர் தொகுதியில் அதிமுக போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு குறைவு என்ற ரிப்போர்ட் அதிமுக தலைமைக்கு சென்றடைய, உஷாரான கழகம், அதன் பிறகே கூட்டணி கட்சியான பாமகவுக்கு இந்த தொகுதியை ஒதுக்கியதாக தெரிகிறது. பாமகவும் இதை ஏற்றுக் கொண்டு வேத. முகுந்தனை வேட்பாளராக அறிவித்தது. இந்த சூழலில், தஞ்சையில் இருந்து ஷிஃப்ட்டான அமமுக, கீழ்வேளூரில் போட்டியிடுவதாக திடீரென அறிவித்தது.

நேரடி சவால்
ஏற்கனவே அதிமுக மீதுள்ள அதிருப்தியில், எந்தளவுக்கு ஓட்டு விழும்னு- தெரியலையே என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்த பாமக, இப்போது கணிசமாக முக்குலத்தோர் வாக்குகள் கொண்ட கீழ்வேளூரில் அமமுகவே நேரடியாக போட்டியிட, சவாலை சமாளிக்க தனது கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனை களமிறக்கியுள்ளது பாமக. இந்த தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications