விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு
சென்னை: காடுவெட்டி குரு பாமக திடீரென திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த குருவின் மகள் விருதாம்பிகை திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். மேலும் வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார். அப்போது அவர், வன்னியர் விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு வன்னியர் ஓட்டுக்கள் குறைவாக உள்ள பெரம்பூரில் பாமக போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கூறிய விருதாம்பிகை, முன்னதாக அன்புமணி ராமதாஸ் தரப்பிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது என்றும், ஆனால், தனது தந்தைக்கு செய்த துரோகம் காரணமாக அங்குச் செல்ல மனமில்லை என பேட்டியளித்தார்.

திமுகவுக்கு ஆதரவு
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் சுற்று சுழன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் தற்போது சீட் கிடைக்கவில்லை, மதிப்பு இல்லை, பதவி இல்லை என்று கூறி மாற்று கட்சிக்கு தாவி வருகின்றனர்.
அந்த வகையில் மறைந்த காடுவெட்டி குருவின் (பாமக) மகள் விருந்தாம்பிகை திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார். இன்று சென்னை அண்ணா அறிவாலயம் வந்த விருதாம்பிகை முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அப்போது அவர் நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார். மேலும் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.
விஜய்யிடம் காசு வாங்கிக் கொண்டு
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறோம். ஏன் என்றால் திமுக தேர்தல் அறிக்கையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து அனைத்து சமுதாய மக்களுக்கும் கணக்கெடுப்பு எடுத்து உரிய பங்கீடு கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். அது மட்டும் இன்றி இந்த தேர்தலில் வன்னியர்கள் 27 பேருக்கு சீட் கொடுத்திருக்கிறது. இதேபோன்று கலைஞர் ஆட்சியிலும் தியாகிங்களுக்கு ரூ.3 லட்சம் கொடுத்து இருந்தாங்க..
அவங்களுக்கு இப்போது வரை ஓய்வூதியம் கிடைத்துக்கொண்டு இருக்கிறது. அன்புமணி தரப்பிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆனால் எனக்கு அங்கு செல்ல விருப்பம் இல்லை. ஏன் என்றால் அன்புமணி காசுக்காகவும், சீட்டுக்காகவும் தான் விலை போகின்றார். பெரம்பூர் தொகுதியில் விஜய் அவர்களிடம் காசு வாங்கிக் கொண்டு திலகபாமாவை நிப்பாட்டி இருக்காங்க..
பெரம்பூரில் வன்னியர் ஓட்டு குறைவு
பெரம்பூர் தொகுதியில் வன்னியர் ஓட்டுக்கள் குறைவாகத் தான் இருக்கு. அப்படி இருக்கும் போது அங்கு அவரை நிப்பாட்ட வேண்டிய தேவையே இல்லை.. இந்த தொகுதிக்கு பதிலாக வேறு ஒரு தொகுதியினையாவது கேட்டு இருக்கலாம். ஆனால் விஜய் வெற்றி பெறுவதற்காக இப்படி செய்து இருக்கிறார்கள். போன முறை பாஜகவிடம் காசு வாங்கிக் கொண்டு நின்றீர்கள். இந்த முறை விஜய்யிடம் காசு வாங்கிக் கொண்டு அவங்களை நிப்பாட்டி இருக்கீங்க..
இப்படி நடக்கின்ற அநீதியை சொல்லி சொல்லி வாக்கு கேட்போம். அன்புமணியின் முகத்திரையை கிழிப்பது தான் எங்கள் இலக்கு. இவ்வளவு நாட்கள் எங்க சமூக மக்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்கள். இனியும் ஏமாற்ற விடமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications