யார் கைக்கு போகப்போகுது மாம்பழம்? தைலாபுரத்தில் ராமதாஸ் அவசர ஆலோசனை!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் உடன் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி சந்திப்பை நடத்தியிருக்கிறார். மேலும் சில நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது பேரன் முகுந்தனை முன்னிறுத்தி கட்சி மீது தனக்கு இருக்கும் பிடியை மேலும் வலுவாக்க ராமதாஸ் முயன்று வருவதாக சொல்லப்படுகிறது. அதாவது தேர்தலில் வேட்பாளர்களை முன்னிறுத்துவது, தேர்தல் வியூகம் அமைப்பது, மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை என அனைத்து அதிகாரத்தையும் முகுந்தனிடம் ஒப்படைக்க ராமதாஸ் திட்டமிட்டு வருகிறார்.

முன்னதாக மே.16ம் தேதி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் கூட்டத்தை ராமதாஸ் கூட்டியிருந்தார். ஆனால் அதில் ஈயடித்திருந்தது. வெறும் 15 பேர் மட்டுமே வந்திருந்தார்கள். 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துக்கொள்ள வேண்டிய கூட்டம் இது. ஆனால் 20 பேர் கூட வராதது ராமதாஸை கடுப்பாக்கியுள்ளது. இதில் இரண்டு விஷயங்கள் கன்பார்ம் செய்யப்பட்டிருக்கிறது. ஒன்று கட்சிக்குள் ராமதாஸுக்கு மவுசு குறைந்திருக்கிறது. இரண்டாவது வராதவர்களை ராமதாஸ் சும்மா விடப்போவதில்லை.
விரைவில் இவர்களை களை எடுக்கும் பணிகள் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. நீக்கப்பட்டவர்களுக்கு மாற்றாகவும், தனக்கு விசுவாசியாகவும் இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை இந்த பொறுப்புகளுக்கு கொண்டு வர சமூக முன்னேற்ற சங்க நிர்வாகிகளிடம் பட்டியல் கேட்டிருப்பதாகவும் தைலாபுரம் தோட்ட சோர்ஸ்கள் கூறுகின்றன.
இந்த நிலையில்தான் இன்று மாலை தோட்டத்தில் ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், அன்புமணி தரப்பு இதை கொஞ்சமும் ரசிக்கவில்லை. இதற்கு பதிலடியாக அவசர பொதுக்குழு கூட்டவும் அன்புமணி திட்டமிட்டிருக்கிறாராம். இப்போது அன்புமணிவசம் இரண்டு வேலிட் பாயிண்ட்கள் இருக்கின்றன. ஒன்று, அன்புமணி செயல் தலைவராக மாற்றப்பட்டாலும், அதை இன்னும் பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. அதேநேரம் தேர்தல் ஆணையமும் அன்புமணியைதான் இன்னும் தலைவராக கருதுகிறது. எனுவே, அவசர பொதுக்குழுவை கூட்டி தனக்கு இருக்கும் பலத்தை பயன்படுத்தி அனைத்து அதிகாரங்களையும் பறிக்க அன்புமணி திட்டமிட்டிருக்கிறாராம்.
இந்த சலசலப்புகளால் தோட்டத்தின் தொண்டர்கள் கடுமையாக அதிர்ந்து போயிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications