ஆஞ்சியோ டெஸ்ட் டாக்டர் ராமதாசுக்கு? சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. எப்படி இருக்கிறார்?
சென்னை: தமிழக அரசியலின் மூத்த ஆளுமையான மருத்துவர் ராமதாஸ் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அவருக்கு இதயப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவரது தற்போதைய ஆரோக்கிய நிலை குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக தேர்தல் களம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிர வைக்கும் ஒரு சம்பவம் சேலத்தில் நேற்று நடந்துவிட்டது..

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் தனது அணி வேட்பாளருக்காகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகத் திடீரென மயங்கிச் சரிந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 86 வயதான ஒரு முதுபெரும் தலைவர், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் களத்தில் நின்றபோது நிகழ்ந்த இந்தச் சம்பவம், தொண்டர்களிடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.
நேற்று மாலை பள்ளப்பட்டி பகுதியில் வாகனத்தில் நின்றபடி மக்களிடையே எழுச்சியுரை ஆற்றிக் கொண்டிருந்த ராமதாஸ், தனது பேச்சை முடித்துவிட்டு காரில் ஏற முயன்றபோது நிலைதடுமாறி மயக்கமடைந்தார்.
ஐசியூ - உடனடி சிகிச்சை
உடனடியாக பாதுகாப்புப் படையினரும் கட்சி நிர்வாகிகளும் அவரைத் தாங்கிப் பிடித்து, சேலத்தில் உள்ள ஒரு தனியார் பன்னோக்கு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குள்ள ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மூத்த டாக்டர்கள் குழு இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீர்செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
டாக்டர் ராமதாஸுக்கு ஏற்கனவே 2013-ம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, அவர் அடிக்கடி சென்னை அப்போலோ மருத்துவமனையில் முறையான பரிசோதனைகளையும் செய்து வருகிறார்.
மயங்கி விழ என்ன காரணம்
இந்நிலையில் நேற்று ராமதாஸ் மயங்கி விழுந்துவிடவும், பாமக தொண்டர்கள் பதறிப்போனார்கள்.. ஆனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென குறைந்ததே அவரது மயக்கத்திற்கு முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. லோ சுகர் மட்டுமல்லாமல், தமிழகத்தில் நிலவி வரும் அதீத வெப்பத்தால் ஏற்பட்ட நீர்ச்சத்துக் குறைபாடும் (Dehydration) ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உடல்நிலை சீராக உள்ளதாகவும். அவர் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருந்தாலும் இன்னும் 24 மணிநேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும், தற்காலிகமாகப் பிரசாரத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்..
பாமக தொண்டர்கள் - நிம்மதி
தந்தை - மகன் இடையேயான அரசியல் மோதல்கள் மற்றும் உட்கட்சிப் பூசல்கள் தந்த அழுத்தத்திற்கு மத்தியிலும், இந்த வயதில் டாக்டர் ஐயா காட்டும் உறுதி அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அதிமுக-வின் கோட்டையாகக் கருதப்படும் சூழலில், அங்கு தனது செல்வாக்கை நிரூபிக்க ராமதாஸ் மேற்கொண்ட அசுர வேகப் பிரசாரம் அவரை சோர்வடையச் செய்துள்ளது என்றாலும், "86 வயதிலும் மக்களுக்காகக் களத்தில் போராடும் தலைவர்" என்ற பிம்பம், வாக்காளர்களிடையே ஒரு மிகப்பெரிய கவனத்தை பெற்று வருகிறது.. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நிலை சீராகி உள்ளது, தொண்டர்களிடையே நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது!!
ஆஞ்சியோ டெஸ்ட்
இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அவருக்கு இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் தொடர்பான சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் ஒரு பகுதியாக 'கார்டியோ ஆஞ்சியோகிராம்' (Cardio Angiogram) செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உடல்நிலை விசாரித்த ஸ்டாலின்
தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் ..பரிசோதனையில் ரத்தக் குழாய்கள் சீராக இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து நேரில் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications