இதைத் தவிர வேறு வழியில்லை.. ஊரடங்கு நீட்டிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு.. டாஸ்மாக் உத்தரவால் மகிழ்ச்சி
சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மதுக்கடைகள் திறக்கப்படாதது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு ஜூன் 7ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், அதை ஜூன் 14ம் தேதிவரை நீட்டித்து அரசு இன்று உத்தரவு பிறப்பித்தது.
11 மாவட்டங்களில் நிலவரம்
இதில் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு சற்று குறைவான தளர்வுகளும், பிற மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் , கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய் பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது என குறிப்பிட்டு அங்கு மட்டும் மளிகை கடை திறப்பு உள்ளிட்ட சில தளர்வுகள் மட்டும் அமலுக்கு வந்துள்ளன.
தனியார் நிறுவனங்கள்
அதேநேரம், தமிழகம் முழுக்க டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. அரசு அலுவலகத்தில் 30 விழுக்காடு பணியாளர்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட துறைகளை தவிர்த்து பிற, தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை.
ஏழைகளுக்கு பலன்
இதேபோல சலூன் கடைகளை திறக்கவும் அனுமதிக்கவில்லை. பூ, காய்கறி, பழங்கள் விற்பனை கடைகள் காலை 6 மணியிலிருந்து மாலை 5 மணிவரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே ஏழை, எளியவர்கள் பலனடைவார்கள்.
ராமதாஸ் வரவேற்பு
இந்த நிலையில்தான், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கிற்கு, ராமதாஸ் வரவேற்பு தெரிவித்து டுவீட் வெளியிட்டுள்ளார். "தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய சூழலில் நோயைத் தடுக்க இதைத் தவிர வேறு வழியில்லை. தளர்வு என்ற பெயரில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படாதது மகிழ்ச்சியளிக்கிறது. மதுக்கடைகள் நிரந்தமாக மூடப்பட்டால் கூடுதல் மகிழ்ச்சி!" இவ்வாறு ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.