அன்புமணியை நீக்கினார் ராமதாஸ்! பனையூரில் பரபரப்பு! புதிய நிர்வாகிகள் யார் யார் தெரியுமா?
சென்னை: பாமக தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். புதிதாக 21 பொறுப்பாளர்களை நியமித்து புதிய நிர்வாகக் குழு பட்டியலையும் அவர் வெளியிட்டார்.
பாமக சட்டசபை தலைமை கொறடாவாக இருந்த சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மயிலம் சட்டசபை உறுப்பினர் சிவகுமாரை நியமிக்க வேண்டும் என அன்புமணி தரப்பை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிலையில் அருளை நீக்கக் கூடாது என ராமதாஸ் தரப்பும் மனு கொடுத்தது. இதன் மீது சபாநாயகர் எப்போது, எந்த மாதிரியான முடிவை எடுப்பார் என்பதை இப்போதே சொல்ல முடியாது. இந்த நிலையில் நேற்றைய தினம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக தலைமைக் குழு கூட்டம் நடந்தது. இந்த நிலையில் அன்புமணி, திலகபாமா, வழக்கறிஞர் பாலு, வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்த தலைமை நிர்வாகக் குழுவை கலைப்பதாக ராமதாஸ் அறிவித்தார்.
அன்புமணி
இந்த குழுவுக்கு பதிலாக பனையூர் அன்புமணி, ஜி.கே. மணி, அருள், பரந்தாமன், தீரன், அருள்மொழி உள்ளிட்ட 21 பேர் அடங்கிய புதிய நிர்வாகிகள் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் ராமதாஸ் பேசுகையில், கட்சியில் உள்ள யாரையும் நியமிக்கவோ நீக்கவோ அன்புமணிக்கு அதிகாரம் கிடையாது. எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என தெரிவித்தார். இந்த நிலையில் அன்புமணி நீக்கம் தொடர்பான அறிவிப்பு இன்று காலை வெளியானது.
திண்டிவனம் தைலாபுரம்
முன்னதாக திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த ஜி.கே. மணி, செய்தியாளர்களிடம் பேசும்போது , "ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் பேசினால் மட்டுமே பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும். மாறி மாறி நிர்வாகிகளை நீக்குவதும், மாற்றுவதும் இந்தப் பிரச்சனைக்கு ஒருபோதும் தீர்வாக அமையாது.
45 ஆண்டுகள்
இரு தலைவர்களும் ஒன்றுசேரவில்லை என்றால், பா.ம.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்" என்று தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். மேலும் பாமக நிர்வாகிகள் , தொண்டர்கள் மத்தியில் ஒரு விதமான குழப்பமும் கவலையும் ஏற்பட்டுள்ளதாகவும் மணி தெரிவித்திருந்தார். மேலும் "45 ஆண்டுகளுக்கும் மேலாக, பட்டிதொட்டி எங்கும் சென்று, சோறு தண்ணீர் பாராமல் இந்த இயக்கத்தை ராமதாஸ் வளர்த்தார். இந்தப் பெரும் சாதனை எளிதாக வந்துவிடவில்லை. ராமதாஸ் இல்லாவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சி இல்லை. இன்று பேசப்படும் கட்சியாக பா.ம.க. வளர்ந்திருப்பதற்கு அவர்தான் காரணம். ராமதாஸ் காட்டிய வழியில் அனைவரும் நடக்க வேண்டும்," என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸின் பங்களிப்பை ஜி.கே.மணி நினைவுபடுத்தினார்.
ஜி.கே.மணி சொன்னது என்ன
அதே நேரத்தில், அன்புமணியின் முக்கியத்துவத்தையும் ஜி.கே. மணி எடுத்துரைத்தார். "அன்புமணியையும் எங்கள் கட்சியில் முன்னிலைப்படுத்தியுள்ளோம். அவர்தான் பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளர். மத்திய அமைச்சராக இருந்து பல நலத்திட்டங்களைச் செய்ததன் மூலம் பா.ம.க.வை அவர் மேலும் வலிமைப்படுத்தியுள்ளார்," என்று அன்புமணி ராமதாஸின் செயல்பாடுகளைப் பாராட்டினார். தற்போது ராமதாஸின் நீக்கத்திற்கு அன்புமணியோ அவர் தரப்பினரோ ஏதேனும் எதிர்வினையாற்றுகிறார்களா என்பதை பார்க்க வேண்டும். இப்படியே நிர்வாகிகளை ஒருவருக்கொருவர் நீக்கிக் கொண்டே இருந்தால் , கட்சியில் குழப்பங்களை ஏற்படுத்தும் என ஜி.கே.மணி கவலைத் தெரிவித்திருந்த நிலையில் கூட இது தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.












Click it and Unblock the Notifications