அன்புமணி கட்டுப்பாட்டில் தான் பாமக உள்ளது.. 9 ஆம் தேதி நடந்த பொதுக்குழு தான் செல்லும்.. பாலு பேட்டி
சென்னை: அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு தான் 100 சதவீதம் சட்டப்பூர்வமானது என்றும், கட்சி விதிகளுக்கு உட்பட்டு தான் இந்த பொதுக்குழு நடத்தப்பட்டது எனவும் பாலு கூறினார். மேலும் அன்புமணி ராமதாஸ் கட்டுப்பாட்டில் தான் பாமக உள்ளது எனவும் அவர் கூறினார். அன்புமணி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என கூறி ராமதாஸ் பெயரில் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதம் குறித்தும் பாலு விளக்கமளித்தார்.
பாமகவின் பாலு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அன்புமணி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு என்பது சட்டப்பூர்வமாக நடத்தப்பட்டது ஆகும். கட்சியின் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு நடத்தப்பட்ட பொதுக்குழு, 100 சதவீதம் சட்டப்பூர்வமாக நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழுவில் ஏறக்குறைய 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

சட்டப்பூர்வமாக நடத்தப்பட்ட பொதுக்குழு
பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாசும், பொதுச் செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமாவும் அடுத்து ஒரு ஆண்டுக்கு அவர்களுடைய பதவிக்காலத்தை நீட்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தகவல் என்பது தேர்தல் ஆணையத்துக்கு முறையாக தெரிவிக்கப்பட உள்ள நிலையில், தற்போது பொதுக்குழு நடத்துவதாக ஒரு செய்தியும், அந்த பொதுக்குழு கட்சியின் பொதுக்குழு என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
9 ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு தான் சட்டப்பூர்வ பொதுக்குழு. அதற்கு பிறகு 17 ஆம் தேதியிலோ, வேறு தேதியிலோ நடத்தப்பட்டால் அது பொதுக்குழுவே கிடையாது. சட்டப்பூர்வ பொதுக்குழு கிடையாது. பொதுக்குழுவை கூட்டவோ, தலைமை தாங்குவதற்கோ யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதில் கட்சி விதிகள் தெளிவாக சொல்கிறது. நேற்று தேர்தல் ஆணையத்தில் பாமக நிறுவனர் சார்பில் ஒரு புகார் கொடுத்ததாக செய்திகள் வெளியாகின. இது வருத்தமளிக்கிறது.
அன்புமணியின் கட்டுப்பாட்டில் தான் பாமக
ராமதாஸின் நேர்முக உதவியாளர் சுவாமிநாதன் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். இது மருத்துவர் ராமதாஸ் ஒப்புதலோடுதான் வழங்கப்பட்டதா? என்ற கேள்வியை நாங்கள் முன்வைக்கிறோம். ஏனென்றால் விதி 13 ஐ பின்பற்றவில்லை என்று கூறப்பட்டுள்ளது. சுவாமிநாதன் பாமகவில் இருந்து நீக்கப்பட்டவர். அவருடைய செயல்பாடுகள், நம்பகத்தன்மை இல்லை என்பதால் நீக்கப்பட்டவர். சுவாமிநாதனை தைலாபுரம் தோட்டத்துக்கு அனுமதிக்க கூடாது என்று ராமதாஸ் சொன்னவர் தான் இந்த சுவாமிநாதன்.
யார் இவர், இவர் எதற்காக பாமகவின் செயல்பாடுகள் பற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும். இவர் எல்லாம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களை பொறுத்தவரை பாமக முழுவதும் அன்புமணியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சுவாமிநாதன் கடிதம்
முன்னதாக கட்சி விதி 13-ன்படி உண்மைக்கு புறம்பானது என்றும் இதனால் அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமானது என டாக்டர் ராமதாஸ் பெயரில் அவரது ஒப்புதலோடு நேர்முக உதவியாளர் சுவாமிநாதன் தேர்தல் ஆணையத்து ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.
மாமல்லபுரத்தில் பாமக செயல் தலைவர் அன்புமணி தலைமையில் கடந்த 9 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அழைப்பு விடுக்காமல் பொதுக்குழு கூட்டம் நடத்தியது கட்சி விதி 13-ன்படி உண்மைக்கு புறம்பானது, சட்டவிரோதமானது. என்று இந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது. மேலும் இந்த கடிதமானது மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் உளவுத்துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அன்புமணி ஆதரவாளர்கள் கருத்து
இது குறித்து தான் தற்போது அன்புமணி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. கூட்டத்திற்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும், அவரது வழிகாட்டுதலின்படிதான் கூட்டத்தை நடத்த வேண்டும் என பாமகவின் விதி 13-ல் கூறப்பட்டுள்ளது. ஆனால் நிறுவனர் அனுமதியோடு தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடவில்லை என்று சொல்லி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications