அன்புமணியை விட்டு திலகபாமா விலகினால்தான் கட்சிக்கு நல்லது! சொன்னது யாருனு பாருங்க
சென்னை: திலகபாமா, அன்புமணி ராமதாஸை விட்டு விலகுவதுதான் நல்லது என பாமக பொதுச் செயலாளர் முரளி சங்கர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். ராமதாஸுடன் 3 தீயசக்திகள் இருப்பதாக அன்புமணி விமர்சித்திருந்த நிலையில் திலகபாமா குறித்து ராமதாஸ் தரப்பு விமர்சித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த மாவட்டச் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மத்திய மாவட்டச் செயலாளர் டேனியல் தலைமை வகித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸால் நியமிக்கப்பட்ட பொதுச் செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் முரளி சங்கர் பேசுகையில், 36 ஆண்டுகளாக தமிழகத்தில் மிகவும் சிறுபான்மை சமூகமான பழங்குடியினத்தை சேர்ந்த என்னை பொதுச் செயலாளராக்கிய மருத்துவர் ராமதாஸுக்கு நன்றி.
திலகபாமா
முன்னாள் பொருளாளர் திலகபாமா பேசிய ஆடியோவில் ஐயாவை வைத்துக் கொண்டு எப்படி கட்சி நடத்த முடியும் என கூறியதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? மூத்த நிர்வாகிகளையும் திலகபாமா தரக்குறைவாக நடத்தியதால் கட்சி நிர்வாகிகள் பலர் ஒதுங்கியே இருந்தார்கள்.
ராமதாஸ்
தற்போது மீண்டும் தீவிரமாக பணியாற்றுகிறார்கள். ராமதாஸை விட்டு விலகியது போல் திலகபாமா, அன்புமணியை விட்டு விலகுவதுதான் அவருக்கும் கட்சிக்கும் நல்லது. பாமக நிறுவனர் ராமதாஸிடம் அனைத்து அதிகாரங்களும் இருக்கின்றன.
இலந்தை பழம்
பழங்குடியினத்தை சேர்ந்தவரை பொதுச் செயலாளராக நியமித்துள்ளதை இலந்தை பழம் விற்பவர்களுக்கு பதவி என அன்புமணி கூறுவது தவறு. ராமதாஸ் மிகவும் நிதானமாக, தெளிவாகவும் முடிவுகளை எடுக்கிறார்.
வெற்றிக் கூட்டணி
வெற்றிக் கூட்டணியை விரைவில் அறிவிப்பார். விரைவில் பாமக மாநில பொதுக் குழு கூட்டம் நடைபெறும். அதற்கு முன்பு உட்கட்சி பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படும். 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை பாமக ஒரே அணியாக எதிர்கொள்ளும் என தெரிவித்தார்.
அன்புமணி பேசியது என்ன
பாமக சமூக ஊடகப்பிரிவு கூட்டத்தில் நேற்று முன் தினம் அன்புமணி பேசுகையில் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராமதாஸ் கூறிதான் பாஜகவுடன் கூட்டணி பேசினேன். விசிகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? இதெல்லாம் திமுகவின் சூழ்ச்சி!
சூழ்ச்சி
திமுகதான் பாமகவின் எதிரி! திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யுங்கள். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தற்போது ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது. என்றைக்காவது ஒரு நாள் ராமதாஸை விசிக தலைவர் திருமாவளவன் புகழ்ந்து பேசியுள்ளாரா? தற்போது ஏன புகழ்ந்து பேசுகிறார்?
விசிகவுக்கு என்ன அக்கறை
விசிகவின் வன்னியரசு, ரவிக்குமார், சிந்தனைச் செல்வனுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது. சி.வி.சண்முரம் தைலாபுரம் வருகை குறித்து நான் கேட்ட போது அவர் பத்திரிகை வைப்பதற்காக வந்தார் என ராமதாஸ் கூறினார்.
3 தீயசக்திகள்
ஐயா தற்போது ஐயாவாக இல்லை. அவருடன் இருக்கும் 3 பேர் சுயலாபத்திற்கு அவரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக அவர் வயது முதிர்வின் காரணமாக குழந்தையாக மாறிவிட்டார். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பதிலடி
இதற்கு பதிலடியாக எம்எல்ஏ அருள் கூறுகையில், அன்புமணி ராமதாஸை சுற்றி எத்தனை தீயசக்திகள் உள்ளன என்பதை நான் பட்டியலிடட்டுமா? தெருவோரத்தில் இலந்தை பழம் விற்பனை செய்வோர் என்ன அவருக்கு கேவலமா? பாட்டாளியை அவமானப்படுத்தாதீர் என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications