சீனா உளவுக் கப்பல்.. பாமக கோரிக்கையின்படி இலங்கையை எச்சரித்த மத்திய அரசு..அன்புமணி மகிழ்ச்சி
சென்னை: இலங்கைக்குள் சீனாவின் உளவுக் கப்பல் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இந்திய வெளியுறவுத்துறை கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக சீனாவின் யுவான் வாங் - 5 உளவுக்கப்பல் அம்பான்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசு தடை விதித்திருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கோணத்தில் இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.
சீன உளவுக்கப்பலை இலங்கை துறைமுகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என இலங்கை அரசை எச்சரிக்கும்படி மத்திய அரசை பாமக வலியுறுத்தியிருந்தது. அதன்படி சீனக்கப்பலின் வருகை தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
1987ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இந்திய ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை மண் பயன்படுத்தக்கூடாது. அந்த ஒப்பந்தத்தை இலங்கை மதித்து நடப்பதை மத்திய அரசு உறுதிசெய்யவேணடும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த வாரம் சீனா உளவு கப்பல் தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்ததாவது: சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்திவாய்ந்த உளவுக்கப்பல் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி இலங்கையின் அம்மாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து, ஒரு வாரத்திற்கு நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சீன உளவுக் கப்பலின் வருகை, இந்தியாவின், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். சீன உளவுக்கப்பல் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

சீனாவின் உளவு சதி
750 கி.மீக்கும் அதிக சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும் செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் சீனக் கப்பலுக்கு உண்டு. அதாவது கூடங்குளம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்னிந்தியாவின் ஆறு துறைமுகங்களையும் யுவான் வாங் கப்பல் எளிதில் உளவு பார்த்து, அது குறித்த தகவல்களையும் சேகரித்து விட முடியும். அணுசக்தி ஆராய்ச்சி நிலையங்கள் இந்தியாவின் பாதுகாப்புடன் எத்தகைய தொடர்பு கொண்டவை என்பதை அறிந்தவர்களால், சீன கப்பலின் இலங்கை வருகை தென்னிந்தியாவுக்கு எத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இந்தியாவுக்கு தேவை எச்சரிக்கை
இந்தியாவை உளவு பார்க்க சீனா துடிப்பதும், அதற்கு இலங்கை உதவுவதும் இது முதல்முறையல்ல. கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி சீனாவின் சாங்ஷெங் -2 நீர்மூழ்கிக் கப்பலும், சாங் ஜிங் தாவ் போக்கப்பலும் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து 5 நாட்கள் இந்திய நிலைகளை உளவு பார்க்க முயன்றன. இலங்கைக்கு கொடுத்த கடனை காரணம் காட்டி அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், அதைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலங்களையும் வளைத்து விட்ட சீனா, அங்கிருந்தும் இந்தியாவை உளவு பார்க்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறது. கடந்த திசம்பர் மாதத்தில் இலங்கைக்கான சீனத் தூதர் சென்ஹாங், யாழ்ப்பாணத்திற்கு சென்று, அங்கிருந்து படகு மூலம் இராமேஸ்வரத்தை ஒட்டிய இராமர் பாலத்தின் மூன்றாவது மணற்திட்டு வரை பயணித்து, இந்தியாவை உளவு பார்ப்பதற்கான உத்திகளை வகுத்துச் சென்றிருந்தார்.அப்போதே சீனாவின் இத்தகைய சதித்திட்டங்களை சுட்டிக்காட்டி, இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரித்திருந்தேன்.

1987 ஒப்பந்தம்
சீனாவின் முந்தைய சதித் திட்டங்களின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டும். சீன உளவுக் கப்பலின் வருகையை தொடக்கத்தில் மறைத்த இலங்கை அரசு, பின்னர் உண்மை அம்பலமான பிறகு தான் ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான சீனச் சதிகளுக்கு இலங்கை ஆட்சியாளர்கள் அப்பட்டமாக துணைபோகின்றனர் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம். சீனக் கப்பலின் இலங்கை வருகை என்பது ஐக்கிய நாடுகள் கடல் சட்ட உடன்படிக்கையை மீறிய செயல் ஆகும். சீனக் கப்பலை இலங்கை அனுமதிப்பது 1987-ஆம் ஆண்டு இந்திய, இலங்கை அமைதி உடன்பாட்டிற்கு எதிரான செயலாகும். அந்த உடன்பாட்டின்படி இலங்கை மண்ணை இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயல்களுக்கு பயன்படுத்தக்கூடாது.
Recommended Video

இந்தியா முடிவெடுக்கனும்
சீனக் கப்பலை அனுமதிப்பது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால் அதை இலங்கை அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இலங்கை இந்தியாவிடமிருந்து கச்சத்தீவு உள்ளிட்ட ஏராளமான உதவிகளைப் பெற்றுக் கொண்டாலும் கூட, ஒரு நாளும் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததில்லை. இப்போதும் கூட, கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் இலங்கைக்கு கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ.32,000 கோடி உதவி வழங்கியுள்ளது. இவ்வளவுக்குப் பிறகும், இந்தியாவுக்கு எதிராக, சீனாவுக்கு சாதகமாக செயல்படும் இலங்கையை இனியும் நம்ப வேண்டுமா? என்பது குறித்து இந்தியா முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது. இவ்வாறு ராமதாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications